காலநிலையில் மாற்றம்!

தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பகுதியில் மே 6ம் திகதி முதல் கொந்தளிப்பான தன்மை உருவாகும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் வெளியிடப்படும் எதிர்கால அறிவிப்புகள் தொடர்பில் அவதானம் செலுத்துமாறு வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாட்டின் பல பகுதிகளிலும் இன்று (04.05) பிற்பகல் வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனவும் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

நாட்டின் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்து வருகிறது. இந்நிலையில் கடந்த 24 மணித்தியாலங்களில் யாழ்ப்பாணத்தின் தெல்லிப்பளை பிரதேசத்தில் 74.8 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.

கடும் மழை காரணமாக அவை பதுளை மாவட்டத்தில் ஹல்துமுல்ல மற்றும் பசறை, கேகாலை மாவட்டத்தில் கேகாலை, மாத்தறை மாவட்டத்தில் கொட்டபொல மற்றும் பஸ்கொட ஆகிய 3 மாவட்டங்களில் உள்ள 5 பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு முதல் நிலை மண்சரிவு எச்சரிக்கை விடுக்க தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் நேற்று (03.05) பிற்பகல் நடவடிக்கை எடுத்திருந்தது.

மழையினால் 8 மாவட்டங்களில் 176 குடும்பங்களைச் சேர்ந்த 660 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 65 வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version