வறுமை 70 இலட்சத்தை தாண்டியுள்ளது- சஜித் விசேட அறிக்கை!

இந்நாட்டில் பதினான்கு சதவீதமாக இருந்த ஏழ்மை 31% ஆக அதிகரித்துள்ளதுடன்,
நாட்டின் மொத்த வறுமை 70 இலட்சத்தை தாண்டியுள்ளது. மருத்துவமனைகளுக்குத் தேவையான மருந்துப் பற்றாக்குறையால் இலங்கை தற்போது மிக மோசமான சுகாதாரப் பேரிடரை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

மருந்துக்கான பற்றாக்குறை, மருந்தின் விலை உயர்வின் ஊடான மோசடி, ஊழல் என எல்லாவற்றையும் கருத்திற் கொள்ளும் போது, ஒட்டுமொத்த அரசாங்கமும் இந்நாட்டின் நோய்வாய்ப்பட்ட மக்களின் வாழ்க்கையுடனும் விளையாடிக்கொண்டிருக்கிறது என அவர் வெளியிட்டுள்ள விசேட ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் நிலவும் உண்மை நிலவரத்தைப் புரிந்து கொள்ள ஒரு வெளிப்படைதன்மையான கணிப்பீட்டை நடத்துவதுதான் அரசாங்கம் முதலில் செய்திருக்க வேண்டும். மாறாக,அரசாங்கம் தொண்டைக்குள் போலி மருந்தை புகட்டி ஒட்டுமொத்த நாட்டையும் ஆபத்தில் தள்ளிவிட்டுள்ளது என குற்றம் சுமத்தியுள்ளார்.

ஏழ்மையான மக்களுக்கு நிவாரணம் வழங்கவென அரசாங்கம் அஸ்வெசும எனும் கண்மூடித்தனமான நிவாரணத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளதோடு, இத்திட்டத்தின் மூலம் சுமார் 12 இலட்சம் பேருக்கு மூன்று ஆண்டுகளுக்கு நிவாரணம் வழங்கப்படும். நாட்டில் 70 இலட்சம் ஏழ்மையான மக்கள் இருக்கும் போது 12 இலட்சம் பேருக்கு நிவாரணம் வழங்குவதன் நோக்கம் என்னவென அரசாங்கத்திடம் கேள்வி எழுப்புவதோடு, எந்த கணக்கெடுப்பின், எந்தத் தரவுகளின் அடிப்படையில் இந்த 12 இலட்சம் பேர் தெரிவு செய்யப்பட்டனர் என்றும் அரசாங்கத்திடம் கேள்வி எழுப்புகிறோம் என சஜித் கேள்வி எழுப்பியுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச எதேச்சதிகாரமாக உரங்களைத் தடைசெய்து முழு நாட்டையும் பஞ்சத்தில் தள்ளியுள்ளதோடு, அவருக்குப் பின் இடைக்கால ஜனாதிபதியாக வந்த ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கம் முழு நாட்டையும் ஏமாற்றி முழு நாட்டு மக்களையும் மரணப் படுக்கைக்குக் கொண்டு சென்று கொண்டிருக்கிறது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் அரசாங்கம் நாட்டுக்கு செய்யப்போகும் பாரதூரமான அவலங்கள் குறித்து ஐக்கிய மக்கள் சக்தியாகி நாம் முன்னரே நாட்டுக்கு எச்சரிக்கை விடுத்ததோடு, தற்போதைய அரசாங்கத்தின் செயற்பாடுகள் முன்னைய அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு எந்த விதத்திலும் இரண்டாம் பட்சமில்லை என ஆரம்பத்திலிருந்தே எச்சரித்து வருகின்றோம்.

எவ்வாறாயினும்,நாட்டையும் நாட்டு மக்களையும் ஆபத்தில் ஆழ்த்துவது மட்டுமே அரசாங்கத்தின் ஓரே விருப்பமாக அமைந்திருப்பதோடு, அவ்வாறான நோக்கம் இல்லாமல் இருப்பதாக இருந்தால் மக்கள் மீது இவ்வளவு அழுத்தத்தை பிரயோகிக்க அரசாங்கம் எந்த நடவடிக்கைகளையும் மேற்கொள்ளாது.

தற்போது, நாட்டிற்கு முக்கியமான சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தம் கூட ஒரு பொதுவான இலக்குடன் ஒன்றாக இணைந்து நாட்டிற்காக சிந்திக்கப்படுவதை விடுத்து, வெறுமனே தனது குறுகிய இலக்குகளை அடைவதற்காகவே அரசாங்கம் இதை செய்யும் நிலைக்கு வந்துள்ளது.

இவை அனைத்தும் சந்தர்ப்பவாத அரசாங்கத்தின் குறுகிய நோக்கற்ற தன்னிச்சையான செயல் முறையைத் தவிர வேறொன்றையும் புலப்படுத்துவதாக இல்லை. இந்நிலையை மாற்றி மக்கள் சார் சிந்தனைவாயிலாக புதிய மக்கள் ஆணையின் மூலமே நாட்டைக் கட்டியெழுப்ப முடியும் என்பதை மீண்டும் மீண்டும் வலியுறுத்துவதோடு, இதற்காக அரசாங்கத்திற்கு அனைத்து அழுத்தங்களையும் பிரயோகிப்போம் என்பதையும் வலியுறுத்துகிறோம்.

நாட்டின் தற்போதைய நிலைமையை புரிந்து கொண்டு LIRNE asia நிறுவகம் நடத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளதன் பிரகாரம், நாட்டின் 70 இலட்சம் ஏழ்மை மக்களையும் இலக்காகக் கொண்டு அஸ்வெசும நிவாரணத் திட்டம் செயற்படுத்தப்பட வேண்டும் என்பதோடு, குறுகிய இலக்குகளை இலக்காகக் கொண்டு அறிவியலற்ற முறையில் முன்வைக்கும் நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவதற்குப் பதிலாக, விஞ்ஞானபூர்வமான திட்டத்தின் மூலம் உண்மையான தேவைகளை அடையாளப்படுத்துபவர்களை தேர்ந்தெடுக்க வேண்டும் என்றும், நாட்டில் நிலவும் கடுமையான மருந்துப் பற்றாக்குறைக்கு உடனடியாக தீர்வு காணப்பட வேண்டும் என்றும், இதற்குத் தேவையான ஒத்துழைப்பை ஐக்கிய மக்கள் சக்தி வழங்கும் என்பதையும் ஞாபகப்படுத்திக் கொள்கிறோம் எனவும் சஜித் பிரேமதாச வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version