வவுனியாவில் இரு இன இளைஞர் குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் ஐவர் காயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதில் ஒருவர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
வவுனியா, பட்டாணிச்சூர் பகுதியில் உள்ள மோட்டார் சைக்கிள் விற்பனை நிலையம் ஒன்றின் முன்பாக குறித்த மோதல் சம்பவம் நேற்று (16.07) இரவு இடம்பெற்றது.
இந்த மோதலில், குறித்த பகுதியில் பயணித்த கார் ஒன்று வழிமறிக்கப்பட்டு தாக்கி சேதமாக்கப்பட்டுள்ளது.
இதில் வவுனியா, யாழ் ஐஸ்கிறீம் வீதியில் வசிக்கும் டிலான் (வயது 25) என்ற இளைஞர் படுகாயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
தாக்குதலில் படுகாயமடைந்தவரின் சகோதரர் மீதும் குறித்த குழு வவுனியா வைத்தியசாலையில் வைத்து தாக்குதல் மேற்கொண்டுள்ளது.
இதனையடுத்து வைத்தியசாலையில் பதற்ற நிலை ஏற்பட்டதுடன், வைத்தியசாலை முன்பாகவும் இரு இளைஞர் குழுக்களுக்கு இடையில் மோதல் ஏற்பட்டது. அதிலும் ஒருவர் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதன்படி குறித்த சம்பவத்தால் மொத்தமாக 5 பேர் காயமடைந்துள்ளனர்.
அத்துடன் சம்பவம் குறித்து செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளர்களும் அச்சுறுத்தப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் நெளுக்குளம் பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.