மட்டக்களப்பு ஈழத்து திருச்செந்தூர் முருகன் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவம்!

ஈழமணித் திருநாட்டின் கிழக்கிலங்கையின் வரலாற்றுச் சிறப்புடையதும் தொன்மை வாய்ந்ததுமான மகா துறவி சுவாமி ஓங்காரானந்த சரஸ்வதி அவர்களால் ஸ்தாபிக்கப்பட்ட மட்டக்களப்பு கல்லடி ஈழத்து திருச்செந்தூர் முருகன் ஆலய வருடாந்த மஹோற்சவப் பெருவிழாவின் தேர்த்திருவிழா நேற்று (12.09) திகதி செவ்வாய்க்கிழமை ஆயிரக்கணக்கான பக்த அடியார்கள் புடைசூழ மிகச்சிறப்பாக இடம்பெற்றதாக அரசாங்க தகவல் திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

மட்டக்களப்பு ஈழத்து திருச்செந்தூர் முருகன் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவம்!

கடந்த 04 திகதி இடம்பெற்ற கொடியேற்றத்தினை தொடர்ந்து முதல் எட்டு நாட்களும் திருவிழாக்கள் நடைபெற்று, ஒன்பதாம் நாளாகிய இன்று பி.ப 4 மணியளவில் மூலமூர்த்திக்கு விசேட பூசை வழிபாடுகள் இடம்பெற்றதனைத் தொடர்ந்து வசந்த மண்டப பூசை என்பன இடம்பெற்று சுவாமி உள்வீதி உலா வந்ததனைத் தொடர்ந்து சித்திரத்தேரில் முருகப்பெருமான் ஆரோகனிக்கப்பட்டு ஆண் அடியார்களும் பெண் அடியார்களும் வடம்பிடித்து இழுக்க அரோகரா கோசத்திற்கு மத்தியில் நடனக் கலைஞர்களின் நடன ஆற்றுகைகளுடன் தேரோட்டம் மிக விமர்சையாக இடம்பெற்றது.

பத்தாம் நாளாகிய இன்று (13.09) வங்கக் கடலில் சுவாமியின் சமுத்திர தீர்த்தோற்சவம் இடம்பெற்று இவ்வாண்டிற்கான மஹோற்சவ பெருவிழா இனிதே நிறைவடையவுள்ளது.

இலங்கையில் ஆகம முறைப்படி அமைக்கப்பட்ட ஆலயங்களில் தமிழ் மொழியில் வேத பாராயணங்கள் ஓதப்பட்டு முருகப்பெருமானிற்கு பூசை வழிபாடுகள் இடம்பெறும் ஒரேயொரு ஆலயமாக இவ்வாலயம் திகழ்கிறது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version