மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனம் (மெசிடோ) வட மாகாணத்தில் சுயதொழில் முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்ற சுயதொழில் முயற்சியாளர்களை இனம் கண்டு அவர்களுக்கான சுயதொழிற் பயிற்சிகளை வழங்கிப் பயனாளிகளை ஊக்குவித்து வருகின்றது.
அந்த வகையில் கருவாடு பதனிடல், பனை உற்பத்தி பொருட்கள், சவர்க்கார உற்பத்தி இன்னும் பல சுயதொழிற் பயிற்சிகளை வழங்கி வருகின்றது.
இப்பயிற்சிகளினூடாகப் பயனாளிகள் தங்களுடைய உற்பத்திகளை அதிகரித்து வருமானம் பெற்று வரும் நிலையில் இலங்கை கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையினால் சந்தை வாய்ப்பு ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளது.
இச்சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொள்ளும் முகமாக எமது பயனாளிகளான சுயதொழில் முயற்சியாளர்கள் தங்களுடைய உள்ளூர் உற்பத்திகளான கருவாடு, சவர்க்கார உற்பத்திகள் மற்றும் பனை உற்பத்திப் பொருட்களை கண்டிக்கு கொண்டு சென்று மூன்று நாட்கள் நடைபெற்ற சந்தை வியாபாரத்தில் ஈடுபட்டிருந்தனர்.
இவர்கள் தங்களுடைய உற்பத்திப் பொருட்களை விற்பனை செய்து பல இலட்சம் ரூபாய் இலாபம் ஈட்டியுள்ளனர்.
மேலும், உள்ளுர் உற்பத்தித் தொழில் முயற்சியாளர்களை ஊக்குவித்த நிறுவனமான மெசிடோ நிறுவனத்தைப் பாராட்டிச் சான்றிதழும் வழங்கப்பட்டிருந்தது.
அது மட்டுமின்றி வியட்நாம் நாட்டில்(Vietnam,Hanoi) ஒக்டோபர் 30ம் முதல் எதிர்வரும் நவம்பர் மாதம் 2ம் திகதி வரை நடைபெறும் சர்வதேச வர்த்தகக் கண்காட்சி மற்றும் விற்பனைச் சந்தையில் பங்கேற்க அழைக்கப்பட்டிருப்பதும் விசேடம்சமாகும்.