கரைச்சி பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட நிறுவை அளவு கருவிகளுக்கு முத்திரை பதிக்கும் வேலைத்திட்டம் இன்று(21.11) செவ்வாய்க்கிழமை தொடக்கம் எதிர்வரும் 24ம் திகதி வரை நடைபெறவுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களத்தின் கிளிநொச்சி மாவட்ட ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
21ம் திகதி ஸ்கந்தபுரம் நூலகக் கட்டிடத்திலும், 22ம் திகதி வட்டக்கச்சி சிவிக்சென்ரர் கிராம சேவையாளர் பிரிவிலும் மற்றும் 23, 24ம் திகதிகளில் மாவட்ட செயலகம் வளாகம் 2இல் அமைந்துள்ள அளவீட்டு அலகுகள் திணைக்களத்திலும் காலை 9.00 மணி தொடக்கம் மாலை 3.00 மணிவரை நடைபெறவுள்ளது.
கிளிநொச்சி மாவட்டத்தில் வர்த்தக நிலையங்களில் பொருட்கொள்வனவில் ஈடுபடும் நுகர்வோரினை பாதுகாக்கும் வகையில், வர்த்தக நிலையங்களில் உள்ள நிறுவை அளவு கருவிகளுக்கு முத்திரை பதிக்கும் வேலைத்திட்டம் மாவட்ட செயலக வளாகம் 2ல் அமைந்துள்ள அளவீட்டு அலகுகள் திணைக்களத்தினால் முன்னெடுக்கப்படுகிறது.
இதன்போது, 12 மாதகாலப் பகுதியில் முத்திரையிடப்படாத அளவீட்டு கருவிகளுக்கு முத்திரையிடப்படவுள்ளது.
வர்த்தக நிலையங்களில் முத்திரை இடப்படாத தராசுகள் பாவனைக்கு முற்றாக தடைசெய்யப்பட்டுள்ள நிலையில், வருடாந்தம் இந்த முத்திரையிடும் பணிகளை அளவீட்டு அலகுகள் திணைக்களம் மேற்கொண்டு வருகின்றது.
மேலும் இவ்வாறு முத்திரையிடப்படாது வணிக நடவடிக்கைகளில் ஈடுபடும் நபர்கள் மீது 1995ம் ஆண்டின் 35ஆம் இலக்க அளவீட்டு அலகுகள், நியமங்கள் சேவைகள் சட்டத்தின் பிரகாரம் சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளது.