இந்தியா, இங்கிலாந்து- இங்கிலாந்துக்கு கடினமான இலக்கு

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையில் இந்தியா விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்துக்கு அணிக்கு 399 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கை இந்தியா அணி நிர்ணயம் செய்துள்ளது. தமது இரண்டாம் இன்னிங்சில் துடுப்பாடி வரும் இங்கிலாந்து அணி மூன்றாம் நாள் நிறைவில் 01 விக்கெட்டை இழந்து 67 ஓட்டங்களை பெற்றுள்ளது. ஷக் க்ரவ்லி ஆட்டமிழக்காமல் 29 ஓட்டங்களை பெற்றுள்ளார்.

தமது இரண்டாவது இன்னிங்சில் இந்தியா அணி சகல விக்கெட்ளையும் இழந்து 255 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. இதில் சுப்மன் கில் 104 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார். இது அவரின் மூன்றாவது சதமாகும். மூன்றாமிலக்கத்தில் துடுப்பாட ஆரம்பித்த பின்னர் அவர் பெற்றுக்கொண்ட முதல் சதமாகும். 13 இன்னிங்சின் பின்னர் அவர் 50 ஓட்டங்களை தாண்டியுள்ளார். அக்ஸர் பட்டேல் 47 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். இங்கிலாந்து அணியின் பந்துவீச்சில் ரொம் ஹார்ட்லி 4 விக்கெட்களையும், ரெஹான் அஹமட் 3 விக்கெட்களையும், ஜேம்ஸ் அன்டேர்சன் 2 விக்கெட்களையும் கைப்பற்றினார்கள்.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பாடிய இந்தியா அணி சகல விக்கெட்களையும் இழந்து 396 ஓட்டங்களை பெற்றுள்ளது. யஷாஸ்வி ஜய்ஷ்வால் 209 ஓட்டங்களை பெற்றுக் கொடுத்தார். அவரின் துடுப்பாட்டம் மூலமே இந்தியா அணி தப்பித்துள்ளது. ஏனைய துடுப்பாட்ட வீரர்கள் எவரும் அரைச்சதத்தை கூட தொடவில்லை. சுப்மன் கில் 34 ஓட்டங்களையும், ராஜாத் படித்தர் 32 ஓட்டங்களையும் பெற்றனர்.

இங்கிலாந்து அணியின் பந்துவீச்சில் ஜேம்ஸ் அன்டேர்சன், சொஹைப் பஷீர், ரெஹான் அஹமட் ஆகியோர் தலா மூன்று விக்கெட்களை கைப்பற்றினர்.

இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 55.5 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 253 ஓட்டங்களை இங்கிலாந்து அணி பெற்றுக் கொண்டது. இதில் ஷக் க்ரோவ்லி 76 ஓட்டங்களையும், பென் ஸ்டோக்ஸ் 47 ஓட்டங்களையும் பெற்றனர். இந்தியா அணியின் பந்துவீச்சில் ஜஸ்பிரிட் பும்ரா சிறப்பாக பந்துவீசி 06 விக்கெட்ளை கைப்பற்றி இங்கிலாந்து அணியின் ஓட்ட எண்ணிக்கையை கட்டுப்படுத்த உதவினார். குல்தீப் யாதவ் 3 விக்கெட்ளை கைப்பற்றினார்.

இரண்டு அணிகளுக்குமான ஐந்து போட்டிகளடங்கிய தொடரில் முதற் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று தொடரில் முன்னிலையில் காணப்படுகிறது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version