தமது வங்கிக் கணக்குள்ள நிதி நிறுவனத்துடன் தொடர்பு கொண்டு வர்த்தக உடன்படிக்கை செய்து கொள்வதன் மூலம் வர்த்தகம் தொடர்பான QR குறியீட்டை இலகுவாக பெற்றுக்கொள்ள முடியும் என மத்திய வங்கியின் பணிப்பாளர் வசந்த அல்விஸ் தெரிவித்தார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று(12) நடைபெற்ற UPI முறைமை தொடர்பாக விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இலங்கை மத்திய வங்கியில் பதிவு செய்யப்பட்ட அனைத்து வங்கிகளும் நிதி நிறுவனங்களும் இந்தக் குறியீட்டை வழங்கக் கடமைப்பட்டிருப்பதாக அவர் வலியுறுத்தினார்.
பெரும்பாலான இந்தியர்கள் QR குறியீடு ஊடாக கொடுப்பனவுகளை செலுத்துவதற்குப் பழக்கப்பட்டிருப்பதால், இந்திய சுற்றுலாப் பயணிகள், இலங்கை முழுவதும் உள்ள வர்த்தக சமூகத்திற்கு பணம் செலுத்துவதற்கு UPI- தொலைபேசி செயலிகளை தடையின்றி பயன்படுத்த முடியும் எனவும் வசந்த அல்விஸ் தெரிவித்தார்.
ஏற்கனவே உள்ளுர் பரிவர்த்தனைகளுக்கு மிகவும் உகந்த முறைமையான , LankaQR ஊடாக QR குறியீட்டை ஸ்கேன் செய்வதன் மூலம் கொடுப்பனவுகளை செலுத்த முடியும்.
இதன் மூலம் செலுத்தப்படும் பணம் இலங்கை ரூபாவில் உரிய வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டு உடனடியாக குறுஞ்செய்தி மூலம் அறிவிக்கப்படும்.
இவ்வாறான வருமானத்தை அவர்களது வங்கிக் கணக்குகளில் வரவு வைப்பதன் மூலம் சிறிய மற்றும் நடுத்தர வர்த்தகர்களுக்கு 06 மாதங்களில் குறுகிய காலத்தில் வங்கிக் கடன்களை பெற்றுக் கொள்ளும் வாய்ப்பும் வழங்கப்படும்.
NPCI International Payments Limited மற்றும் இலங்கையின் LankaPay பிரைவேட் லிமிடெட் இணைந்து செயல்படுத்தும் இந்த திட்டத்தை விரைவாக விரிவுபடுத்தும் நோக்கத்துடன், 10,000 வர்த்தக நிலையங்களில் இந்த கட்டண முறை இதனுடன் இணைந்ததாக நடைமுறைப்படுத்தப்படுகின்றது.
இந்த வசதியை மேலும் விரிவுபடுத்துவதன் மூலம், 2024 மார்ச் மாதத்திற்குள் , இந்த வர்த்தக நிலையங்களின் எண்ணிக்கை 65,000 ஆக உயர்த்துவதற்கு எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
இரண்டாவது கட்டத்தில், இந்த கட்டமைப்பை மேலும் விரிவுபடுத்துவதுடன், இந்தியாவில் QR குறியீடு மூலம் பணம் செலுத்தும் வசதியை இலங்கையர்களுக்கு வழங்கவும் எதிர்பார்க்கப்படுகிறது.