மன்னார் பேசாலை பகுதியில் உள்ள வீடொன்றிலிருந்து பல இலட்சம் ரூபா பெறுமதியான நகைகள் மற்றும் பணத்தை கொள்ளையிட்ட சம்பவமொன்று பதிவாகியுள்ளது.
இந்த சம்பவம் நேற்று(22.04) காலை 10 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த வீட்டில் வசிக்கும் கணவன் மற்றும் மனைவி இருவரும் பணியின் நிமித்தம் வெளியே சென்ற பின்னர், கதவை உடைத்து வீட்டுக்குள் கொள்ளையர்கள் நுழைந்துள்ளனர்.
இதன்போது வீட்டில் இருந்த தாலிக்கொடி உட்பட சுமார் பதின்மூன்றரைப் பவுண் நகைகளும், ஐம்பதாயிரம் ரூபா பணமும் திருடப்பட்டுள்ளதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதுவரையில் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை என்பதுடன், பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.