சென்னை இரசிகர்களை அமைதிப்படுத்திய லக்னோ அணி 

இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் லக்னோ சூப்பர் ஜயன்ட்ஸ் அணி வெற்றி பெற்றுள்ளது. 

இந்த ஆண்டு ஐ.பி.எல் தொடரில் சென்னை அணி சொந்த மைதானத்தில் முதலாவது தோல்வியை பதிவு செய்தது. 

சென்னையில் இன்று(23.04) நடைபெற்ற இந்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற லக்னோ அணி களத்தடுப்பை தெரிவு செய்தது. 

அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய சென்னை அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 210 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. 

சென்னை அணி சார்பில் அணித் தலைவர் ருதுராஜ் கெய்க்வாட் 108 ஓட்டங்களையும், ஷிவம் துபே 66 ஓட்டங்களையும் அதிகப்பட்சமாக பெற்றுக்கொண்டனர். 

லக்னோ அணி சார்பில் பந்துவீச்சில் மேட் ஹென்றி, மோசின் கான் மற்றும் யாஷ் தாகூர் தலா ஒரு விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

211 ஓட்டங்களை வெற்றி இலக்காக கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய லக்னோ அணி 19.3 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை கடந்தது.

சென்னை மைதானத்தில் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அணியொன்று அதிகூடிய ஓட்டங்களைப் பெற்று வெற்றி பெற்ற சந்தர்ப்பம் இதுவாகும்.  

லக்னோ அணி சார்பில் மார்கஸ் ஸ்டோய்னிஸ் 124 ஓட்டங்களையும், நிகோலஸ் பூரன் 34 ஓட்டங்களையும் அதிகப்பட்சமாக பெற்றுக்கொண்டனர். 

சென்னை அணி சார்பில் பந்துவீச்சில் மதீஷ பத்திரன 2 விக்கெட்டுகளையும், தீபக் சஹார் மற்றும் முஸ்தபிசுர் ரஹ்மான் தலா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர். 

இதன்படி, இந்த போட்டியில் லக்னோ சூப்பர் ஜயன்ட்ஸ் அணி 6 விக்கெட்டுகளினால்  வெற்றியீட்டியதுடன், போட்டியின் ஆட்ட நாயகனாக லக்னோ அணியின் மார்கஸ் ஸ்டோய்னிஸ் தெரிவு செய்யப்பட்டார். 

இந்த போட்டியில் வெற்றியீட்டியதன் ஊடாக லக்னோ அணி ஐ.பி.எல் தொடரின் தரவரிசை பட்டியலில் 10 புள்ளிகளுடன் 4ம் இடத்திற்கு முன்னேறியுதுடன், சென்னை அணி 8 புள்ளிகளுடன் 5ம் இடத்திலுள்ளது. 

இதேவேளை, ஐ.பி.எல் தொடரின் நாளைய போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் குஜராத் டைடன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. 

டெல்லியில் நாளை(24.04) இரவு 7.30 மணிக்கு குறித்த போட்டி ஆரம்பமாகவுள்ளது. 

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version