சப்ரகமுவ மாகாணத்தின் இரத்தினபுரி மற்றும் கேகாலை மாவட்ட தமிழ் மொழி பாடசாலைகளுக்கு இம் மாவட்டத்தில் உள்ள பட்டதாரி ஆசிரியர்களை புறக்கணித்து வெளி மாவட்ட பட்டதாரி ஆசிரியர்கள் பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளனர் என இரத்தினபுரி மற்றும் கேகாலை மாவட்ட பட்டதாரி ஆசிரியர்கள் தமது கவனத்திற்கு கொண்டு வந்ததாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் செயலாளரும் அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
இதன்போது கலந்து கொண்டு கருத்து தெரிவித்த பட்டதாரிகள் இரத்தினபுரி மற்றும் கேகாலை மாவட்ட தமிழ் பாடசாலைகளில் கடமையாற்ற தகுதியுடைய பட்டதாரி ஆசிரியர்கள் தயாராக உள்ளதாகவும் இந்த நிலையில் இம் மாவட்ட பட்டதாரி ஆசிரியர்களை புறக்கனித்து விட்டு இங்குள்ள தமிழ் பாடசாலைகளுக்கு வெளி மாவட்டங்களில் இருந்து பட்டதாரி ஆசிரியர்களை நியமித்து வருவதாக பட்டதாரி ஆசிரியர்கள் அமைச்சர் ஜீவன் தொண்டமானிடம் தெரிவித்தனர்.
எனவே இவ் விடயம் தொடர்பாக தாம் ஜனாதிபதி உள்ளிட்ட கல்வி அமைச்சின் கவனத்திற்கு கொண்டு வந்து, கேகாலை மற்றும் இரத்தினபுரி மாவட்ட தமிழ் பாடசாலைகளுக்கு இம் மாவட்டத்தில் உள்ள பட்டதாரி ஆசிரியர்களை உள்வாங்க நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கையை முன் வைத்தாக அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
அதனடிப்படையில் இரத்தினபுரி மற்றும் கேகாலை மாவட்ட தமிழ் பாடசாலைகளில் காணப்படும் பட்டதாரி ஆசிரியர்கள் ஆளணி பற்றாக்குறையை தீர்க்க இம் மாவட்டத்தில் உள்ள பட்டதாரி ஆசிரியர்களை உரிய பாடசாலைகளுக்கு உள்வாங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதன்போது சப்ரகமுவ மாகாண சபை முன்னாள் உறுப்பினர் அண்ணாமலை பாஸ்கரன் தலைமையிலான பட்டதாரி ஆசிரியர்கள், அதிகாரிகள் பலரும் சந்திப்பில் கலந்து கொண்டிருந்தனர்.