சொத்துக்கள் தொடர்பான தகவல்களை கோரும் வர்த்தமானி அறிவிப்பு 

அரச நிறுவனங்கள் உட்பட இலங்கை பிரஜைகளின் அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் தொடர்பான தகவல்களை உள்நாட்டு இறைவரி திணைக்களத்திற்கு எதிர்வரும் ஜூலை மாதம் முதலாம் திகதி முதல் வழங்க வேண்டும் என விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்த வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளார்.

மேலும், இலங்கை பிரஜைகளின் பதிவு செய்யப்பட்ட வாகனங்கள் மற்றும் வாகன உரிமைப் பரிமாற்றங்கள் தொடர்பான தகவல்கள் மற்றும் அதிகாரிகள் பயன்படுத்தும் தகவல்களையும் உள்நாட்டு இறைவரி ஆணையாளர் நாயகத்திற்கு தொடர்ச்சியாக வழங்குமாறும் வர்த்தமானி அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை மத்திய வங்கியால் ஒழுங்குபடுத்தப்படும் வங்கிகள் மற்றும் வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் உட்பட எந்தவொரு நிதி நிறுவனத்தினாலும் பராமரிக்கப்படும் அனைத்து நடப்புக் கணக்குகளின் விவரங்கள் மற்றும் கடன்கள் மற்றும் முற்பணங்கள் பற்றிய தகவல்களும் வழங்கப்பட வேண்டும்.

ஏப்ரல் மாதம் 1ம் திகதிக்கு முன்னர் எந்தவொரு நபரோ அல்லது அரச நிறுவனமோ எந்தவொரு தகவலையும் பராமரிக்கவில்லை என்றால், அந்த தகவலை இந்த ஆண்டு ஜூலை மாதம் 1ம் திகதி தொடக்கம் பராமரிக்கத் வேண்டும் என்றும் வர்த்தமானி அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version