அஸ்வெசும நலன்புரித் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் நிலையில் இதுவரையில் வழங்கப்பட்டு வந்த முதியர்களுக்கான கொடுப்பனவு நிறுத்தப்படுமென வௌியாகும் தகவல்கள் உண்மைக்கு புறம்பானவை என நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது.
2024 ஆம் ஆண்டு மே மாதம் கொடுப்பனவுகளை வழங்குவதற்குத் தேவையான சுமார் 1518 மில்லியன் ரூபா நிதி மாவட்டச் செயலகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொழில்நுட்ப காரணங்களால் கொடுப்பனவுகளை வழங்குவதில் தாமதம் ஏற்பட்டிருந்தாலும், ஜூன் மாதம் இரண்டாம் வாரத்தின் பின்னர் பிரதேச செயலகங்களில் வழமையான முறையில் முதியவர்களுக்கான கொடுப்பனவு வழங்கப்படுமெனவும் நலன்புரி நன்மைகள் சபை கூறியுள்ளது.
அத்துடன் ஜுன் மாத கொடுப்பனவும் குறித்த மாதத்திலேயே வழங்கப்படும் என்றும், அஸ்வெசும கொடுப்பனவு கட்டமைப்பின் கீழ் உரிய வங்கிக் கணக்குகளில் பணத்தை வைப்பிலிடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே தற்போது அஸ்வெசும நலன்புரித் தொகையைப் பெற்றுக்கொள்ளும் குடும்பங்களிலிருந்தும் 70 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கு இந்த கொடுப்பனவு வழங்கப்படும் என்றும் நலன்புரி நன்மைகள் சபை மேலும் தெரிவித்துள்ளது.