T20 உலகக் கிண்ணம்: குறைந்த ஓட்ட எண்ணிக்கைக்குள் சுருண்டது இலங்கை 

டி20 உலகக் கிண்ணத் தொடரின் இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் தென்னாப்பிரிக்க அணி வெற்றி பெற்றுள்ளது. இந்தப் போட்டியின் போது இலங்கை அணி டி20 போட்டியொன்றில் பெற்றுக்கொண்ட குறைந்தளவு ஓட்ட எண்ணிக்கையை பதிவு செய்தது. நியூயார்க்கில் இன்று(03.06) நடைபெற்ற இந்தப் போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. 

அதன்படி, .இலங்கை அணி 19.1 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 77 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக்கொண்டது. இலங்கை அணி சார்பில் குசால் மெண்டிஸ் 19  ஓட்டங்களையும், அஞ்சலோ மெத்தியூஸ் 16 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். தென்னாப்பிரிக்க அணி சார்பில் அன்ரிச் நோர்க்யா 4 விக்கெட்டுக்களையும், ரபாடா, கேசவ் மஹாராஜ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களையும் பெற்றுக்கொண்டனர். 

78 ஓட்டங்களை வெற்றி இலக்காக கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய தென்னாப்பிரிக்க அணி 16.2 ஓவர்களில் 4 விக்கெட்டுக்களை இழந்து வெற்றியிலக்கை கடந்தது. தென்னாப்பிரிக்க அணி சார்பில் டி கொக் 20 ஓட்டங்களையும், கிளாசன் 19 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.இலங்கை அணி சார்பில் பந்துவீச்சில் அணித் தலைவர் வனிந்து ஹசரங்க 2 விக்கெட்டுக்களை கைப்பற்றினார். 

இதன்படி, இந்த போட்டியில் தென்னாப்பிரிக்க அணி 6 விக்கெட்டுக்களினால் வெற்றியீட்டியதுடன், போட்டியின் ஆட்ட நாயகனாக தென்னாப்பிரிக்க அணியின் அன்ரிச் நோர்க்யா தெரிவு செய்யப்பட்டார்.

இதேவேளை, டி20 உலகக் கிண்ணத் தொடரின் மேலும் மூன்று போட்டிகள் நாளை(04.06) நடைபெறவுள்ளன. கயானாவில் நடைபெறவுள்ள போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் உகண்டா அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இலங்கை நேரப்படி காலை 6.00 மணிக்கு போட்டி ஆரம்பமாகவுள்ளது. மற்றைய போட்டியில் நடப்பு சாம்பியனான இங்கிலாந்து மற்றும் ஸ்கொட்லாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இந்த போட்டி பார்படாஸில் இலங்கை நேரப்படி இரவு 8.00 மணிக்கு போட்டி ஆரம்பமாகவுள்ளது. நாளை நடைபெறவுள்ள மற்றுமொரு போட்டியில் நெதர்லாந்து மற்றும் நேபாளம் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. குறித்த போட்டி டாலஸில் இரவு 9.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. 

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version