இலங்கை மகளிர் கிரிக்கெட் அணிக்கும் மேற்கிந்திய தீவுகள் அணிக்குமிடையிலான மூன்று ஒரு நாள் சர்வதேசப் போட்டிகளடங்கிய தொடருக்கும், மூன்று 20-20 போட்டிகளடங்கிய தொடருக்கும் சன்குயிக் நிறுவனம் மற்றும் சிங்கர் நிறுவனம் ஆகியன கைகோர்த்துள்ளன. அத்தோடு நிப்பொன் நிறுவனமும் இணைந்துள்ளது. இன்று(10.06) கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அண்மைக்காலமாக சாமரி அத்தப்பத்து தலைமையிலான இலங்கை மகளிர் அணி சிறப்பாக விளையாடி வருதனால் அனுசரணையாளர்கள் இலங்கை அணிக்கு தற்போது வருகை தர ஆரம்பித்துள்ளனர்.
தாம் இந்த தொடரோடு நிறுத்தப்போவதில்லை எனவும், இலங்கை மகளிர் அணி உலகக்கிண்ண தொடரை வென்று இலங்கைக்கு கொண்டுவருவதே தமது இலக்கு எனவும், அதற்கு தாம் உந்து சக்தியாக இருந்து ஆதரவளிப்போம் என சன்குயிக் நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் மாலிங்க பெரேரா தெரிவித்தார்.
இலங்கை மகளிர் அணி நேர்தன்மையான விடயங்களை மட்டுமே பேசி அதனையே கடைப்பிடிப்பதனாலேயே அண்மைக்காலமாக வெற்றிகளை பெறக்கூடியதாக இருப்பதாகவும், அனுபவம் வாய்ந்த வீராங்கனைகள் மற்றும் புதிய வீராங்கனைகள் கலந்த கலவை மூலமாக அணி சிறப்பாக செயற்பட்டு வருவதாகவும் இலங்கை மகளிர் அணியின் தலைவி சாமரி அத்தப்பத்து நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்து வெளியிட்டுள்ளார். கடந்த காலம் எவ்வாறு இருந்தாலும், ஒவ்வொரு தினமும் அன்று விளையாடும் போட்டி புதிய போட்டி எனவும், அன்றன்று விளையாடும் விதத்திலேயே வெற்றி தங்கியுள்ளதாகவும் கூறினார்.
மேற்கிந்திய தீவுகள் மற்றும் அயர்லாந்து அணிகளுக்கிடையிலான 6 ஒரு நாள் சர்வதேசப் போட்டிகள் விளையாட வேண்டியுளளதாவும், அவற்றில் ஐந்தில் வெற்றி பெற்றால் உலகக்கிண்ண தொடருக்கு நேரடியாக தகுதி பெறலாம் என்ற நிலையில் அதுவே தற்போதைய குறிக்கோள் எனவோம் மேலும் கூறினார்.
மேற்கிந்திய தீவுகள் அணியுடனான ஒரு நாள் சர்வதேசப் போட்டி தொடர் 15,18 மற்றும் 21 ஆம் திகதிகளில் ஹம்பாந்த்தோட்டை மஹிந்த ராஜபக்ஷ மைதானத்தில் நடைபெறவுள்ளது. 24,26 மற்றும் 28 ஆம் திகதிகளில் 20-20 போட்டிகள் நடைபெறவுள்ளன. சகல போட்டிகளும் காலை 10 மணிக்கு ஆரம்பிக்கவுள்ளன.