தோட்ட தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்புக்கு சர்வதேச தொழிலாளர் அமைப்பு பாராட்டு

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை உயர்த்தும் நடவடிக்கைக்கு சர்வதேச தொழிலாளர் அமைப்பின் சமூக அபிவிருத்திக் கொள்கையைப் பின்பற்றியமைக்காக அமைச்சர் மனுஷ நாணயக்காரவை சர்வதேச தொழிலாளர் அமைப்பின் பணிப்பாளர் நாயகம் பாராட்டினார்.

தற்போது ஜெனிவாவில் நடைபெற்று வரும் சர்வதேச தொழிலாளர் அமைப்பின் வருடாந்த சர்வதேச தொழிலாளர் மாநாட்டின் போது அமைச்சருக்கும் சர்வதேச தொழிலாளர் அமைப்பின் பணிப்பாளர் நாயகத்திற்கும் இடையிலான கலந்துரையாடல் நேற்று (10) இடம்பெற்றது.

இதன்போது, பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த குறைந்தபட்ச சம்பளம் 1700 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளமை குறித்தும் பாராட்டினார்.

தொழிலாளர் சந்தை தரநிலைகள் மற்றும் தொழில் நிலைமைகளை மேம்படுத்துவதற்கான தற்போதைய திட்டங்கள் மற்றும் அர்ப்பணிப்பு தொடர்பான உண்மைகளை அமைச்சர் தெளிவுபடுத்தினார்.

சர்வதேச தொழிலாளர் அமைப்பு C188 மீன்பிடி மாநாட்டை அங்கீகரிப்பதற்கு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து விளக்கமளித்த அமைச்சர், அது விரைவில் அங்கீகரிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

தொழில் பாதுகாப்பு மற்றும் உடல்நலம் தொடர்பான மாநாடு (C155), வீட்டுப் பணியாளர்கள் மாநாடு (C189), மற்றும் பணியிட வன்முறை மற்றும் துன்புறுத்தல் (C190) ஆகியவற்றை அங்கீகரிக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகளையும் அமைச்சர் விளக்கினார்.

மேலும் சமூக பாதுகாப்பு அமைப்பை வலுப்படுத்த சர்வதேச தொழிலாளர் அமைப்பின் பணிப்பாளர் நாயகம் உதவுமாறு வேண்டுகோள் விடுத்தார்.

தேசிய தொழிலாளர் சந்தை தகவல் முறைமை மற்றும் தொழிலாளர் சந்தையின் மீட்பு மற்றும் உத்திகளை கண்காணித்து செயல்படுத்துவதற்கு அமைச்சுக்களுக்கு இடையேயான உயர்மட்ட குழுவை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.

மேலும் சர்வதேச தொழிலாளர் அமைப்பு மற்றும்சர்வதேச குடியேற்ற அமைப்புடன் இணைந்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் அமைச்சர் விளக்கினார்.

இதன் மூலம், பணியிடத்தில் பெண்களின் பங்களிப்பை அதிகரிப்பது, பாலின சமத்துவம்,பாரபட்சமான நடைமுறைகளை இல்லாதொழிப்பதன் மூலம் இலங்கையில் பெண்களுக்கு நல்ல வேலை நிலைமைகள் எப்போதும் உறுதிப்படுத்தப்படும் என அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார்.

தொழிலாளர் சந்தையை இலக்காகக் கொண்ட திட்டத்திற்கு சர்வதேச தொழிலாளர் அமைப்பு முழு ஆதரவை வழங்கும் என்று பணிப்பாளர் நாயகம் கில்பர்ட் எஃப். ஹூங்போ உறுதியளித்தார்.

இது நிகழ்வில் ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி ஹிமாலி அருணதிலக்க, தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் மேலதிக செயலாளர் பாலசுப்ரமணியம் சாசந்தன், தொழில் ஆணையாளர் நாயகம் ஜயசுந்தர, பிரத்தியேக செயலாளர் ஷான் யஹம்பத் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version