அபார வெற்றியுடன் தொடரை நிறைவு செய்த இலங்கை 

டி20 உலகக் கிண்ணத் தொடரை இலங்கை அணி வெற்றியுடன் நிறைவு செய்துள்ளது. மேற்கிந்திய தீவுகள், சென் லூசியாவில் இன்று(17.06) நடைபெற்ற இந்த போட்டியில் இலங்கை மற்றும் நெதர்லாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தியிருந்தன. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற நெதர்லாந்து அணி களத்தடுப்பை தெரிவு செய்தது.

அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 201 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. இலங்கை அணி சார்பில் குசால் மெண்டிஸ், சரித்த அசலங்க ஆகியோர் தலா 46 ஓட்டங்களையும், தனஞ்சய டி சில்வா 34 ஓட்டங்களையும், மெத்தியூஸ் 15 பந்துகளில் 30 ஓட்டங்களையும், அணித்தலைவர் வனிந்து ஹசரங்க 6 பந்துகளில் 20 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர். 

202 ஓட்டங்களை வெற்றி இலக்காக கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நெதர்லாந்து அணி 16.4 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 118 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியடைந்தது. இலங்கை அணி சார்பில் பந்துவீச்சில் நுவான் துஷார மூன்று விக்கட்டுக்களையும், வனிந்து ஹசரங்க, மதிஷ பத்திரன ஆகியோர் தலா இரண்டு விக்கட்டுக்களையும் கைப்பற்றினர். 

இதன்படி, இந்த போட்டியில் இலங்கை அணி 83 ஓட்டங்களினால் வெற்றியீட்டியதுடன், போட்டியின் ஆட்ட நாயகனாக இலங்கை அணியின் சரித்த அசலங்க தெரிவு செய்யப்பட்டார். டி20 உலகக் கிண்ணத் தொடரின் முதல் சுற்றில் 4 போட்டிகளில், ஒரு போட்டியில் மாத்திரம் வெற்றியீட்டியுள்ள இலங்கை அணி ‘D ‘ குழாமின் தரவரிசையில் 3 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்தில் நிறைவு செய்துள்ளது. 

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version