தேர்தல்கள் ஆணையாளருக்கு ஜனாதிபதியின் முக்கிய அறிவிப்பு 

உரிய திகதியில் தேர்தலை நடத்த வேண்டும் எனவும், அதற்காக தேர்தல்கள் ஆணையாளருடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் விடயங்களை விளக்கியதாகவும், இலங்கை ராமன்ய நிகாயவின் மகாநாயக்க வண. மகுலேவே விமல நாயக்க தேரரிடம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்ததாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

நாரஹேன்பிட்டி, எல்விடிகல வீதியில் அமைந்துள்ள ஸ்ரீலங்கா ராமன்ய மகா நிகாயவின் தலைமையகத்திற்கு இன்று(05.07) பிற்பகல் விஜயம் செய்த ஜனாதிபதி, இலங்கை ராமன்ய மகா நிகாயவின் மகாநாயக்க வண. மகுலேவே விமல மகாநாயக்க தேரரைச் சந்தித்து நலன் விசாரித்ததுடன், சிறு  கலந்துரையாடிலும் ஈடுபட்டார்.

இதன்போது, பிரித் பாராயணம் செய்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆசி வழங்கிய தேரர், ஜனாதிபதிக்கு நினைவுப் பரிசு ஒன்றையும் வழங்கி வைத்தார்.

இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க,

“கடன் மறுசீரமைப்பு செயல்முறை தொடர்பாக நாங்கள் இப்போது தனியார் கடன் வழங்குநர்கள் மற்றும் வர்த்தக கடன் வழங்குநர்களுடன் கலந்துரையாடலை முடித்துள்ளோம். நாங்கள் செலுத்த வேண்டிய கடனில் இருந்து சுமார் 08 பில்லியன் டொலர்களை குறைக்க முடிந்துள்ளது என்ற நற்செய்தியை உங்களுக்கு தெரிவிக்க விரும்புகிறேன்.

அதேபோன்று, கடனை செலுத்துவதற்கு 04 வருட கால அவகாசம் மற்றும் கடனை முழுமையாக செலுத்த 2043 வரை கால அவகாசம் பெறவும் முடிந்துள்ளது. இந்த நலன்களைப் பயன்படுத்தி இலங்கையின் ஏற்றுமதிப் பொருளாதாரத்தை பலப்படுத்த எதிர்பார்க்கின்றோம். அதற்காக, அடுத்த இரண்டு வருடங்களில் திட்டமிட்ட வகையில் செயற்பட்டால் மீண்டும் கடன் பெறாத நிலைமைக்கு நாட்டைக் கொண்டு செல்ல முடியும்.

பௌத்த நாடான தாய்லாந்து இன்று திறந்த பொருளாதாரத்தின் ஊடாக வலுவான பொருளாதாரத்தை உருவாக்கியுள்ளது. 1950 இல் தாய்லாந்து இலங்கையை விட இரண்டு மடங்கு கடனில் இருந்தது. ஆனால் இன்று, ஏற்றுமதியின் அடிப்படையில் சாதகமான பொருளாதாரத்தை ஏற்படுத்திக் கொண்டுள்ளது.

1991ஆம் ஆண்டு, வியட்நாமின் அன்றைய கைத்தொழில் அமைச்சர் இலங்கைக்கு கைத்தொழில்களையும் முதலீடுகளையும் கொண்டுவருவது பற்றி என்னிடம் கேட்டார். இன்று நான், கைத்தொழில்களையும் முதலீடுகளையும் கொண்டு வருவது தொடர்பாக வியட்நாமின் கைத்தொழில் அமைச்சரிடம் கேட்க வேண்டியுள்ளது.

உரிய திகதியில் தேர்தலை நடத்த வேண்டும் என்று தேர்தல்கள் ஆணையாளரிடம் தெரிவித்துள்ளேன். 2015ஆம் ஆண்டு ஜனாதிபதியின் பதவிக்காலத்தை 06 வருடங்களில் இருந்து 05 வருடங்களாக குறைக்க நான் தான் பரிந்துரைத்தேன். இன்று இந்நாட்டு மக்கள் பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளனர். அதன்படி தற்போது அஸ்வெசும வேலைத்திட்டத்தின் மூலம் மக்களுக்கு நிவாரணம் வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது” என ஜனாதிபதி தெரிவித்துள்ளார். 

இலங்கை ராமன்ய மகா நிகாயவின் அநு நாயக்க வண.வலேகொட குணசிறி தேரர், வண, அத்தங்கனே சாசனரதன தேரர், வண, வேதர மஹிந்த தேரர், வண, மகுலேவே தம்மரதன தேரர், வண, அகரெல்லே குணவங்ச தேரர் உள்ளிட்ட மகாசங்கத்தினர் மற்றும் இலங்கை ராமன்ய மகா நிகாயவின் பாதுகாப்பு சபையின் பொதுச் செயலாளர், இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன, முன்னாள் அமைச்சர் தயா கமகே, நிகாயவின் பாதுகாப்பு சபையின் தம்மிக்க சமரவிக்ரம உட்பட பலர் இச்சந்தர்ப்பத்தில் இணைந்துகொண்டனர்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version