டி20 உலகக் கிண்ணத்தை வென்ற இந்திய அணி, சிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 தொடரின் முதலாவது போட்டியில் தோல்வியடைந்தது. அனுபவம் குறைந்த வீரர்களுடன் களமிறங்கிய இந்திய அணியின் துடுப்பாட்ட வீரர்கள், சிம்பாவேயின் பந்து வீச்சாளர்களை சமாளிக்க இயலாமல் தோல்வியை தழுவினர்.
இரு அணிகளுக்கும் இடையிலான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் சிம்பாப்வேயில் இன்று(06.07) ஆரம்பமாகியது. சிம்பாப்வே, ஹராரேவில் நடைபெற்ற இந்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி களத்தடுப்பை தெரிவு செய்தது.
அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய சிம்பாப்வே அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 115 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. சிம்பாப்வே அணி சார்பில் கிளைவ் மடாண்டே 29(25) ஓட்டங்களையும், டியோன் மயர்ஸ் 23(22) ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். இந்திய அணி சார்பில் பந்துவீச்சில் ரவி பிஷ்னோய் 4 விக்கெட்டுக்களையும், வாஷிங்டன் சுந்தர் 2 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.
116 ஓட்டங்களை வெற்றியிலக்காக கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 19.5 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 102 ஓட்டங்களை பெற்று தோல்வியடைந்தது. இந்திய அணி சார்பில், அணித் தலைவர் சுப்மன் கில் 31(29) ஓட்டங்களையும், வாஷிங்டன் சுந்தர் 27(34) ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். சிம்பாப்வே அணி சார்பில் பந்துவீச்சில் தென்டை சத்தரா, சிக்கந்தர் ராசா ஆகியோர் தலா 3 விக்கெட்டுக்களை கைப்பற்றினர்.
இதன்படி, சிம்பாப்வே அணி 13 ஓட்டங்களினால் வெற்றியீட்டியதுடன், போட்டியின் ஆட்ட நாயகனாக சிம்பாவே அணித் தலைவர் சிக்கந்தர் ராசா தெரிவு செய்யப்பட்டார்.
இந்திய மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான டி20 தொடரின் இரண்டாவது போட்டி நாளை(07.07) நடைபெறவுள்ளது.