சமூகத்தில் உள்ள பலர் ஜனநாயக நாட்டில் உள்ள பல்வேறு துறைகளினது அதிகாரங்கள் குறித்து வெவ்வேறு கதைகளைச் சொல்லி வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
பிரபஞ்சம் தகவல் தொழிநுட்ப வேலைத்திட்டத்தின் கீழ், 321 ஆவது கட்டமாக 1,177,000 இலட்சம் ரூபா பெறுமதியான ஸ்மார்ட் வகுப்பறை உபகரணங்கள் மற்றும் அகராதிகள் என்பன மன்னார், தேவன்பிட்டிய றோமன் கத்தோலிக்க தமிழ் மகா வித்தியாலயத்திற்கு வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. இதன் போதே அவர் இவ்வாறு கருத்து தெரிவித்தார்.
பாடசாலை நடனக் குழுவிற்கு ஆடைகளை கொள்வனவு செய்து கொள்வதற்காக பாடசாலை அபிவிருத்தி நிதியத்திற்கு ஒரு இலட்சம் ரூபா நிதியுதவியும் வழங்கி வைக்கப்பட்டது
மேலும் கருத்து தெரிவித்த அவர்,
நிறைவேற்று அதிகாரம், சட்டவாக்கம் மற்றும் நீதித்துறை அதிகாரங்கள் குறித்துப் பேசுகையில், சிறு வயதிலிருந்தே பிள்ளைகளுக்கு சட்டம் தொடர்பாக, அரசரிவியல் தொடர்பாக கற்பிக்கப்பட வேண்டும் என்று நான் உண்மையாக கருதிறேன் ..
இந்நாட்டைக் கட்டியெழுப்ப தெரிவாகும் அரசாங்கம் கொள்கைகளை வகுப்பது அரசியலமைப்பின் பிரகாரம் என்பதனால் பிரஜைகள் இது அறிந்து கொள்ள வேண்டும். இதன் காரணமாக பாடசாலை நூலகத்தில் அரசியலமைப்பின் பிரதிகள் இருக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
அரசியலமைப்புச் சட்டம் என்பது ஓர் நாட்டின் உயரிய சட்டமாகும். ஜனநாயக முறைமைகள், ஜனநாயகக் கட்டமைப்பின் மூன்று தூண்கள் குறித்து சிறுபராயத்திலிருந்தே தெரிந்து கொள்ளும் பொருட்டு, ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் சகல அரச பாடசாலைகளுக்கும் மூன்று மொழிகளிலும் அமைந்த அரசியலமைப்பின் பிரதிகளை வழங்கி வைப்போம். இதன் மூலம் அரசியலமைப்பு குறித்து அறிந்து தெரிந்த பிள்ளைகளையும் குடிமக்களையும் கொண்ட சமூகத்தை உருவாக்குவோம்.
அவ்வாறு தெரிந்து கொள்ளும் போது, அரசியலமைப்பு, நீதித்துறை குறித்து யார் என்ன கதைகளைச் சொன்னாலும் அவை உண்மையா பொய்யா என்பதை சகலராலும் புரிந்து கொள்ள முடியுமாக இருக்கும். இதன் மூலம் விழிப்புணர்வு சார்ந்த அறிவைப் பெற்றுக்கொள்ள முடியும் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
அரசியலமைப்பில் உள்ள மனித உரிமைகள் அடிப்படை உரிமைகளுக்கு இங்கு அரசாங்கம் பொறுப்புக் கூற வேண்டும். அடிப்படை உரிமைகளுக்காக எம்மால் நீதிமன்றத்தை நாடலாம். என்றாலும், அரசாங்கத்தின் பொறுப்புக்கூறல் கொள்கையடங்கிய 6 ஆவது அத்தியாயத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பாக நீதிமன்றத்தின் உதவியை நாட முடியாது. இது குறித்து நாட்டு மக்கள் விழிப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.
கல்விச் சீர்திருத்தங்களை மேற்கொள்ளும் போது, அரசியலமைப்புச் சட்டத்தின் பிரதிகளை பாடசாலைகளுக்கு வழங்க வேண்டும். அவ்வாறே இதை பாடத்திட்டத்திலும் உள்ளீர்க்க வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் சரியானதை சரியான முறையில் அறிந்து கொள்ள முடியும். ஒவ்வொருத்தரும் சொல்லி வரும் கதைகளை விட, மக்கள் தாமாகவே புத்திசாலித்தனமான தீர்மானங்களை எடுக்க முடியும் என எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.