
இலங்கை, இந்தியா அணிகளுக்கிடையிலான மூன்றாவதும் இறுதியுமான ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் 110 ஓட்டங்களினால் மாபெரும் வெற்றி ஒன்றை பெற்று இலங்கை தொடரை 2-0 என கைப்பற்றியுள்ளது. கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் 1997 ஆம் ஆண்டு 2-1 என இலங்கை இந்தியா அணியை வென்றதன் பின்னர் இந்த தொடர் வெற்றி கிடைத்துள்ளது. வீழ்ச்சியடைந்திருந்த இலங்கை அணிக்கு இந்த தொடர் வெற்றி மிகப் பெரிய உத்வேகத்தை வழங்கியுள்ளது.
பலமான அணியாக முன்னணி அணியாக திகழ்ந்த இந்தியா அணிக்கு ஏன் இந்த திடீர் வீழ்ச்சி? அதிக மாற்றங்கள் மற்றும் அதிக சோதனைகள் தோல்வியை வழங்கியுள்ளது. கெளதம் கம்பீர் பயிற்றுவிப்பு பொறுப்பை ஏற்று 20-20 தொடரை வென்றாலும் இந்த ஒரு நாள் சர்வதேசப் போட்டித் தொடர் அவர் மீது விமர்சனத்தை ஏற்படுத்தும்.
அடுத்த கட்ட முன்னேற்றத்தை எதிர்பார்க்கும் இலங்கை அணிக்கு இந்த தொடர் வெற்றி நம்பிக்கை வழங்குவதாக உள்ளது. புதிய தலைவர், இடைக்கால பயிற்றுவிப்பாளர் சனத் ஜெயசூரியா என மாற்றங்களோடு இந்த தொடரில் இலங்கை அணி விளையாடியது. இந்த உத்வேகத்தோடு தொடந்தும் பயணித்தால் இலங்கை அணி முன்னேற்றப் பாதையில் செல்லலாம்.
249 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கோடு துடுப்பாட்டத்தை ஆரம்பித்த இந்தியா அணிக்குக்கு சிறந்த ஆரம்பம் கிடைக்கவில்லை. அசித்த பெர்னாண்டோ சுப்மன் கில்லின் விக்கெட்டை கைப்பற்றினார். கில் 06 ஓட்டங்களோடு ஆட்டமிழந்தார். ரோஹித் ஷர்மா 35(20) ஓட்டங்களோடு டுனித் வெல்லாளகேயின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அத்தோடு போட்டி விறு விறுப்பான கட்டத்துக்கு நகர்ந்தது. உபாதையிலிருந்து மீண்டதன் பின்னர் ஒரு நாள் சர்வதேசப் போட்டி வாய்ப்பைப் பெற்றுக்கொண்ட ரிஷாப் பான்ட் 06 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். விராத் கோலி 20 ஓட்டங்களுடன் டுனித்தின் பந்துவீச்சில் ஆட்டமிழக்க இலங்கை பக்கமாக போட்டி மாறியது. ஷ்ரேயாஸ் ஐயர் 8 ஓட்டங்களுடனும், அக்சர் பட்டேல் 2 ஓட்டங்களுடனும் அடுத்தடுத்து டுனித் வெல்லாளகேயின் பந்துவீச்சில் ஆட்டமிழக்க இலங்கை அணி முழுமையாக ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்தது.
ரியான் பார்க் 15 ஓட்டங்களோடு ஜெப்ரி வன்டர்சாயின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். ஷிவம் டூபே 09 ஓட்டங்களை பெற்று வன்டர்சாயின் பந்துவீச்சில் ஆட்டமிழக்க இந்தியாவின் துடுப்பாட்ட முக்கியஸ்தர்கள் யாவரும் வெளியேறினார்கள். 17.3 ஓவர்களில் 101 ஓட்டங்களுக்கு 08 விக்கெட்கள் என்ற நிலையில் வொசிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ் ஆகியோர் இணைப்பாட்டம் ஒன்றை உருவாக்கி இலங்கை அணியின் வெற்றியினை தாமதப்படுத்தினர். நிதானமாக துடுப்பாட்டிய வொசிங்டன் சுந்தர் 30 ஓட்டங்களை பெற்ற வேளையில் மஹீஸ் தீக்ஷணவின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
இந்தியா அணி 26.1 ஓவர்களில் சகல விக்ட்களையும் இழந்து 138 ஓட்டங்களை மட்டுமே பெற்றது.
இலங்கை அணியின் பந்துவீச்சில் அசித்த பெர்னாண்டோ 05 ஓவர்களில் 29 ஓட்டங்களை வழங்கி 1 விக்கட்டை கைப்பற்றினார். மஹீஸ் தீக்ஷண 8 ஓவர்களில் 45 ஓட்டங்களை வழங்கி 02 விக்கெட்டை கைப்பற்றினார். டுனித் வெல்லாளகே 5.1 ஓவர்களில் 27 ஓட்டங்களை வழங்கி 05 விக்கெட்களை கைப்பற்றினார். ஜெப்ரி வன்டர்சாய் 5 ஓவர்களில் 34 ஓட்டங்களை வழங்கி 02 விக்கெட்களை கைப்பற்றினார்.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பாடிய இலங்கை அணி மிகச் சிறந்த துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தியது. அவிஷ்க பெர்னாண்டோ, பத்தும் நிஸ்ஸங்க ஆகியோர் இணைந்து 89 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பகிர்ந்தனர். பத்தும் நிஸ்ஸங்க 45(65) ஓட்டங்களை பெற்ற வேளையில் ஆட்டமிழந்தார். அவிஸ்கவுடன் ஜோடி சேர்ந்த குஷல் மென்டிஸ் நல்ல இணைப்பாட்டம் ஒன்றை ஏற்படுத்தினார். இருவரும் 82 ஓட்ட இணைப்பாடங்களை பூர்த்தி செய்த வேளையில் அவிஷ்க 96 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். 2021 ஆம் ஆண்டு ஆர்.பிரேமதாச மைதானத்தில் வைத்து 118 ஓட்டங்களை பெற்றதன் பின்னர் 17 ஆவது இன்னிங்சில் பெற்றுக்கொண்ட கூடுதலான ஓட்ட எண்ணிக்கை இதுவாகும். இந்த மூவரின் துடுப்பாட்டமும் இலங்கை அணியை வலுவான நிலைக்கு கொண்டு சென்றது.
இன்று நான்காமிலக்கத்தில் சரித் அசலங்க துடுப்பாட களமிறங்கினார். ஆனால் இன்றும் அவரின் துடுப்பாட்டம் சொதப்பியது. 10 ஓட்டங்களோடு ரியான் பராக்கின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். வந்த வேகத்தில் முதற் பந்தில் சதீர சமரவிக்ரம ஆட்டமிழக்க இலங்கை அணி ஆட்டம் காண ஆரம்பித்தது. இலங்கையின் வழமையான விக்கெட்கள் வீழ்ந்தால் அடுத்தடுத்து வீழும் சிக்கல் இன்றும் உருவானது.
குஷல் மென்டிஸ் நிதானமாக துடுப்பாடி ஓட்ட எண்ணிக்கையினை அதிகரித்து சென்றார். இருப்பினும் புதிதாக துடுப்பாட்ட வந்த ஜனித் லியனகே சரியான இணைப்பாட்டத்தை வழங்கவில்லை. 08 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். 25 ஓட்டங்களுக்கு 04 விக்கெட்கள் இலங்கை அணிக்கு வீழ்ந்தன. கடந்த இரண்டு போட்டிகளிலும் இலங்கை அணிக்கு துடுப்பாட்டத்தில் கைகொடுத்த டுனித் வெல்லாளகே இந்தப் போட்டியில் கைவிட்டார். 02 ஓட்டங்களோடு ஆட்டமிழந்தார். 28 ஓட்டங்களுக்கு 05 விக்கெட்கள் வீழ்ந்தன. குஷல் மென்டிஸ், கமிந்து மென்டிஸ் ஆகியோர் இணைந்து போராடக்கூடிய ஓட்ட எண்ணிக்கைக்கு இலங்கை அணியை கொண்டு சென்றனர். குஷல் மென்டிஸ் ஆட்டமிழக்கமால் 59 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்தார். கமிந்து மென்டிஸ் ஆட்டமிழக்காமல் 23 ஓட்டங்களையும் பெற்றார். அவரின் இறுதி நேர துடுப்பாட்டம் இலங்கை அணிக்கு கைகொடுத்தது.
இலங்கை அணி 50 ஓவர்கள் நிறைவில் 07 விக்கெட்களை இழந்து 248 ஓட்டங்களை பெற்றது.
இன்றைய போட்டிக்காக அணியில் சேர்க்கப்பட்ட ரியான் பராக் 09 ஓவர்கள் பந்துவீசி 54 ஓட்டங்களை வழங்கி 03 விக்கெட்களை கைப்பற்றினார். அவரின் சர்வதேசப் போட்டி அறிமுகம் மிகவும் சிறப்பாக அமைந்தது. இந்தியா அணியின் பந்துவீச்சில் மொகமட் சிராஜ் 09 ஓவர்கள் பந்துவீசி 78 ஓட்டங்களை வழங்கி 01 விக்கெட்டை கைப்பற்றினார். அக்சர் பட்டேல் 10 ஓவர்கள் பந்துவீசி 45 ஓட்டங்களை வழங்கி 1 விக்கெட்டை கைப்பற்றினார். வொசிங்டன் சுந்தர் 08 ஓவர்களில் 29 ஓட்டங்களை வழங்கி 1 விக்கெட்டை கைப்பற்றினார். குல்தீப் யாதவ் 10 ஓவர்கள் பந்துவீசி 36 ஓட்டங்களை வழங்கி 01 விக்கெட்டை கைப்பற்றினார்.
அணி விபரம்
இலங்கை அணி சார்பாக அகில தனஞ்சய நீக்கப்பட்டு, மஹீஸ் தீக்ஷண அணிக்குள் சேர்க்கப்பட்டுள்ளார். இந்தியா அணி சார்பாக லோகேஷ் ராகுல், அர்ஷீப் சிங் ஆகியோர் நீக்கப்பட்டு, ரிஷாப் பாண்ட், ரியான் பராக் ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இலங்கை அணி: சரித் அசலங்க, பத்தும் நிஸ்ஸங்க, குஷல் மென்டிஸ், அவிஷ்க பெர்னாண்டோ, சதீர சமரவிக்ரம, ஜனித் லியனகே, டுனித் வெல்லாளஹே, மஹீஸ் தீக்ஷண, அசித்த பெர்னாண்டோ, கமிந்து மென்டிஸ்
இந்தியா அணி: ரோஹித் சர்மா, சுப்மான் கில், விராட் கோலி, சிரேயாஸ் ஐயர், ரிஷாப் பாண்ட், சிவம் துபே, வாஷிங்டன் சுந்தர், அக்சர் படேல், குல்தீப் யாதவ், ரியான் பராக், மொஹமட் சிராஜ்