வெளிநாட்டு தொழிலாளர்களின் பணம் அரசியல் நோக்கத்திற்கு பயன்படுத்தப்படுவதாக குற்றச்சாட்டு

வெளிநாட்டு தொழிலாளர்களின் பணம் அரசியல் நோக்கத்திற்கு பயன்படுத்தப்படுவதாக குற்றச்சாட்டு

வெளிநாட்டு தொழிலாளர்களின் பணம் கொள்ளையடிக்கப்பட்டு, தனிப்பட்ட அரசியல் நோக்கத்தை வெற்றி கொள்வதற்காக பல வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவன உரிமையாளர்களுடனான சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்ததாக எதிர்க்கட்சித் தலைவரின் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதன்போது மேலும் கருதது தெரிவித்த சஜித் பிரேமதாச,

வெளிநாடுகளில் வீட்டுப் பணிகளில்   ஈடுபட்டிருக்கின்றவர்களுக்கான கொடுப்பனவுகளில் ஐந்து வீதத்தை  செஸ்வரியாக அறவிடுகின்றனர். வெளிநாட்டு தொழிலாளர்கள் மற்றும் வெளிநாடுகளுக்கு அனுப்புகின்ற நிறுவனங்கள் அத்தோடு உழைப்பாளர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு நலன்புரி விடயங்களுக்காக அந்தப் பணம்  பயன்படுத்தப்படுவதாக இருந்தாலும், அந்த பணத்தை இவன்ட் மேனேஜ்மென்ட் நிறுவனம் பயன்படுத்துகின்றது.

இலங்கையை    வெற்றியடைய செய்வதற்கு பகிரங்கமாக இவன்ட் மேனேஜ்மென்ட் நிறுவனத்தின் வெற்றிக்காக பயன்படுத்தப்படுகின்றது. இந்த விடயத்தில் காணப்படுகின்ற ஊழல், மோசடி, திருட்டு  தொடர்பில் கண்டறியப்படும்.

செஸ்வரி ஊடாக பெறப்படுகின்ற மிகப்பெரிய தொகையை தனிநபர் ஒருவரின் அல்லது  அமைச்சரின் ஆலோசனைக்கமைய  முன்னெடுக்கப்பட வேண்டிய விடயம் அல்ல, பல்வேறு தரப்பினரின் மற்றும் பல குழுக்களின்  பொதுவான அபிப்பிராயத்திற்கு மத்தியில்  நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். அவ்வாறு இல்லை என்றால் இப்போது போன்று  தனிப்பட்ட அரசியல் விடயங்களுக்காக  பயன்படுத்தப்படும். மக்களின் பணம்  முறையற்ற விதத்தில்  பயன்படுத்தப்படுகிறது எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.  

அங்கீகாரம் அளிக்கப்பட்ட வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற சந்திப்பின் போதே எதிர்க்கட்சித் தலைவர் இவ்வாறு தெரிவித்தார்.

அதேபோன்று இஸ்ரேல் போன்ற நாடுகளில்  வழங்கப்படுகின்ற வேலை வாய்ப்புகள் முறையாக இடம் பெறுவதில்லை எனவும் அதில்  மோசடியான செயற்பாடுகள் இடம்பெறுகின்றன. அது குறித்து ஆராய்ந்து  உண்மையை வெளிப்படுத்தி பொறுப்புக் கூற முடியுமான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படும். அத்தோடு  சட்டவிரோத மனித செயற்பாடுகளையும் நிறுத்துவதற்கு  நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

மோசடியான முறையில் பயிற்சி சான்றிதழ்களை வழங்குகின்ற அதிகாரிகள் இருக்கின்றார்கள். தொழிலுக்காக 28 நாட்கள் பயிற்சிக்காக செல்கின்ற போது கைக்கு அடியால் ஒரு இலட்சத்து இருபதாயிரம் ரூபா பணத்தைப்  வழங்கி பயிற்சிச் சான்றிதழ்களை பெற்றுக் கொள்கின்ற புதிய முறை ஒன்று  நடைமுறையில் இருக்கின்றது. தற்போது  இந்தத் துறை திருடர்களின் சுரங்கமாக மாறி இருக்கிறது. இந்தத் திருட்டு வேலைகளை  நிச்சயமாக நிறுத்தி, சுத்தமான ஒரு  அமைச்சரிடம் ஒப்படைத்து இந்த பணியை முன்னெடுப்போம் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

வெளிநாட்டு தொழில் வாய்ப்பில் ஏற்பட்டுள்ள  பல்வேறு பிரச்சினைகள் மோசடியான செயற்பாடுகள் என்பனவற்றின் காரணமாக   இவர்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர் கொண்டுள்ளார்கள். இந்தத் துறையில் காணப்படுகின்ற நல்ல விடயங்களை பாதுகாத்து பலவீனங்களை கைவிட்டு  வெளிநாட்டு வேலைவாய்ப்பு தொடர்பில்  புதிய தேசியக் கொள்கை ஒன்றை உருவாக்கி  பொறுப்புடன் முன்னெடுத்துச் செல்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும்  எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

இந்தத் துறையில் பல குறைபாடுகள் காணப்படுகின்றன. கடவுச்சீட்டுகளை தயாரித்தல் தொடர்பில் பிரச்சினைகள் இருக்கின்றன. ஒரு நாள் சேவையில் கடவுச்சீட்டுக்கள் வழங்கப்பட்டாலும் இப்பொழுது அதற்கு மாதக்கணக்கில் செல்கின்றன. இதற்கு ஒன்லைன் முறை  காரணமாக இருக்கின்றது. ஒன்லைன் முறை துரிதமாக இருந்தாலும் தேவையான  கடவுச்சீட்டுக்கள் இன்மையே சிக்கலாக மாறி இருக்கிறது என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

அதேபோன்று 7.5 இலட்சமாக காணப்பட்ட வங்கி உத்தரவாதம் இப்பொழுது 30 இலட்சமாக காணப்படுகின்றது. அது வருட இறுதியில் 50 இலட்சமாக அதிகரிக்கிறது. இது தொடர்பில் மீண்டும் ஆராய்ந்து  உண்மையான விடயங்களை கண்டறிந்து நடைமுறை செயற்பாடுகள் தொடர்பில்  புரிந்து கொண்டு  செயல்படுவோம். இதற்காக தரவு மைய அறிவியல் சார்ந்த  அணுகுமுறைக்கு செல்வோம் என்று  எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டினார்.

அதேபோன்று வைத்தியச் சான்றிதழ் வழங்குவது தொடர்பில் கண்டறிந்து தன்னிச்சையான போக்கிற்கு பதிலாக  போட்டி தன்மையுடன் கூடிய செயல் முறையை முன்னெடுப்பது அவசியம்.  இதற்காக தொடர்புபட்ட நாடுகளுடன் கலந்துரையாடி தன்னிச்சையான முறையில்  வைத்திய சான்றிதழ்கள் வழங்குவதற்கு  பதிலாக போட்டித் தன்மையுடன் கூடிய  செயற்பாட்டை முன்னெடுப்பதற்கு இராஜதந்திர முறையிலான கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்படும்  என்றும் இதன் போது எதிர்க்கட்சித் தலைவர்  சுட்டிக்காட்டினார்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version