புதியதொரு இலங்கையைக் கட்டியெழுப்புவதே எமது நோக்கம் -ரணில்

புதியதொரு இலங்கையைக் கட்டியெழுப்புவதே எமது நோக்கம் -ரணில்

நாட்டை இருண்ட யுகத்திற்குள் கொண்டு செல்வதைத் தடுத்து, நாட்டின் முன்னேற்றத்துக்காக ஒன்றுபடுவோம் என ஐக்கிய தேசிய கட்சி, மொட்டுக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியினருக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மீண்டும் அழைப்பு விடுத்தார்.

குளியாபிட்டியவில் நேற்று (17.09) பிற்பகல் நடைபெற்ற ‘ரணிலால் இயலும்’ பொதுக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி அழைப்பு விடுத்தார்.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த ரணில் விக்ரமசிங்க,

”நல்ல எதிர்காலத்தை நோக்கி செல்வதா, இல்லையேல் மீண்டும் வரிசைகளில் நிற்கப்போகிறோமா என்பதை நீங்கள் 21 ஆம் திகதி தீர்மானிக்கலாம். நல்ல எதிர்காலமே நாட்டு மக்களின் எதிர்பார்ப்பாகும். கஷ்டங்களை மக்கள் விரும்புவதில்லை. உணவு, கேஸ், மருந்து, எரிபொருள், உரம் என்று எதுவுமே இல்லாத நேரத்தில் மக்கள் குறித்து சிந்தித்தது யார்?

இன்று நாங்கள் ஒன்றுபட்டு நாட்டைக் காப்பாற்றிய பின்னர் தங்களுக்கும் நாட்டை காப்பாற்ற ஒரு வாய்ப்பு வேண்டும் என்று கேட்கிறார்கள்.

நீங்கள் எது கேட்டாலும் தருகிறேன், எனக்கு வாக்களியுங்கள் என்று எதிர்கட்சித் தலைவர் சொல்கிறார். எதிர்கட்சித் தலைவர் என்பவர் நாட்டின் மாற்று பிரதமராக இருக்க வேண்டும்.

நாட்டின் பொருளாதாரம் நெருக்கடியில் சிக்கியிருந்த வேளையில் பாடசாலைகளுக்கு சென்று சிறு பிள்ளைகளிடம் தன்னால் நாட்டின் பொருளாதாரத்தை சீர்படுத்த முடியுமென எதிர்கட்சித் தலைவர் கூறிவந்தார். 2022 ஆம் ஆண்டில் அநுரகுமார திசாநாயக்க மக்களுக்கு ஏதாவது உதவிகளை செய்தாரா?

நாங்கள் வரியை அதிகரித்தபோது மக்களுக்கு கஷ்டத்தில் இருந்ததை அறிவோம். பொருட்களின் விலை இரட்டிப்பாகியுள்ளது ஆனால் வருமானம் கூடவில்லை. என்னை மக்கள் திட்டித்தீர்த்ததையும் பொருட்படுத்தாமல் நான் நாட்டுக்கு தேவையான தீர்மானங்களை எடுத்தேன். அதன் பலனாக இன்று ரூபாவின் பெறுமதி அதிகரித்திருக்கிறது‌ பொருட்களின் விலையும் குறைந்துள்ளது.

அன்று ஒருவேளை உணவை தவிர்த்துவிட்டு பிள்ளைகளை பிரத்தியேக வகுப்புக்கு அனுப்ப வேண்டிய நிலையில் பெற்றோர் இருந்தனர். ஆனால் இன்று சாப்பாட்டு வேளையில் முட்டையும் சேர்த்துக் கொள்ளலாம் என்ற நிலை உருவாகியிருக்கிறது. இன்னும் சில தினங்களில் 02 வேளையும் முட்டை சாப்பிடும் நிலையை உருவாக்குவோம்.

புதியதொரு இலங்கையைக் கட்டியெழுப்புவதே எமது நோக்கமாக இருந்தது. தனியார் துறையினரின் சம்பள அதிகரிப்புக்கும் வழி செய்திருக்கிறோம். அடுத்த வருடத்தில் அரச ஊழியர்களுக்கு சம்பளத்தை அதிகரிப்போம். மேலும் மக்களின் வாழ்க்கைச் சுமை குறையவும் வழி செய்வோம்.

மற்றைய இருவரையும் அழைத்து எவ்வாறு வாழ்க்கைச் சுமையை குறைப்பார்கள் என்று கேட்டால், தராசு வைத்து குறைப்போம் என்றே சொல்வார்கள். அவர்களுக்கு பொருளாதாரமும் தெரியாது, மக்களின் வாழ்க்கைச் சுமையும் புரியாது. நாம் தற்போதைய பொருளாதார முறையில் நாட்டைத் தொடர்ந்தும் கொண்டுச் செல்ல முடியாது.

பொருட்களை இறக்குமதி செய்யக்கூடிய நாட்டில் வௌிநாட்டு வருமானம் இல்லை. நாம் ஏற்றுமதி பொருளாதாரத்தை நோக்கி நகர வேண்டியது அவசியமாகும். அதனை இலக்கு வைத்தே விவசாய நவீனமயமாக்கல் செயற்பாடுகளை முன்னெடுப்போம். அதன்கீழ் குருணாகல் போன்ற பகுதிகளில் புதிய பயிர் விளைச்சல்களை செய்வோம். கருவா உற்பத்தியை மேம்படுத்துவோம். அதேபோல் புதிய வகை தென்னை பயிர்செய்கையை அறிமுகப்படுத்துவது குறித்தும் நாம் ஆராயவிருக்கிறோம்.

கோழிப் பண்ணை தொழில் மற்றும் முட்டை உற்பத்தியையும் ஊக்குவிப்போம். அதிகரிப்போம். அதேபோல் காணி உறுதி இருப்பவர்களுக்கு நாம் நிரந்தர உரிமைகளை தருவோம். குளியாபிட்டிய, யாப்பஹூவ உள்ளிட்ட பிரதேசங்களின் பெருமளவானவர்களுக்கு காணி உறுதிகள் வழங்கப்படவுள்ளது.

நாம் பல தொழிற்சாலைகளை உருவாக்கவுள்ளோம். வெஸ்டர் ஓட்டோமொபைல் நிறுவனத்தைத் திறந்து வைத்துவிட்டே இந்த கூட்டத்திற்கு வந்திருக்கிறேன். அதுவே தென்கிழக்காசியாவின் மிகப்பெரிய வாகன ஒருங்கிணைப்பு நிறுவனமாக செயற்படப்போகிறது. பிங்கிரியவில் ஆயிரம் ஏக்கர் ஒதுக்கப்பட்டுள்ளது. குருநாகலில் பல்கலைக்கழகம் ஒன்றை அமைக்கவிருக்கிறோம்.

எனவே, மக்களை வாழ்ப்பதற்கான திட்டங்களை கொண்டுதான் ‘இயலும் ஸ்ரீலங்கா’ திட்டத்தை உருவாக்கியிருக்கிறோம். நாம் ஒற்றுமையாக செயற்பட்டால் இவ்வாறு எத்தனை திட்டங்களை ஆரம்பிக்க முடியும். அனைத்து கட்சியினருக்கும் நான் அழைப்பு விடுக்கிறேன். 2022 ஆம் ஆண்டுகளில் ஒவ்வொரு கட்சியினரும் எவ்வளவு அச்சத்தில் இருந்தனர் என்பதை மறக்க
முடியுமா? சிலர் இன்றும் யாருக்கு வாக்களிக்க போகிறார்கள் என்பதை சொல்ல அச்சப்படுகிறார்கள்.

அனைத்து கட்சிகளும் ஒன்றுபட்டு வெற்றிபெற்றால் நாட்டுக்கான எத்தனையோ திட்டங்களை செய்ய முடியும். ஐந்து வருடங்கள் ஒன்றுபட்டு செயற்பட முன்வாருங்கள், பின்னர் ஒற்றுமையாக செல்வதா வேறுபட்டு செல்வதா என்பதை தீர்மானிக்கலாம்.

அதனால் நாட்டை வழிநடத்தக்கூடிய பாராளுமன்றத்தை மக்கள் தெரிவு செய்ய வேண்டும். செப்டம்பர் 21
நாம் வெல்வது உறுதி. சிலிண்டருக்கு வாக்களியுங்கள்.” என ஜனாதிபதி கேட்டுக் கொண்டார்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version