இந்தியா, அவுஸ்திரேலியா அணிகளுக்கிடையிலான ஐந்தாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டி அவுஸ்திரேலியா, சிட்னியில் நேற்று(03.01) ஆரம்பித்தது. இரண்டாம் நாளான இன்று 15 விக்கெட்கள் வீழ்ந்துள்ள நிலையில் இரு அணிகளுக்குமான வெற்றி வாய்ப்பு காணப்படுகிறது. நாளைய மூன்றாம் நாளில் போட்டி நிறைவுக்கு வரும் நிலையும் காணப்படுகிறது.
இரண்டாம் நாள் நிறைவில் இந்தியா அணி இரண்டாம் இன்னிங்சில் துடுப்பாடி வருகிறது. ரிஷாப் பான்ட் அதிரடியாக அடித்தாடி ஓட்டங்களை அதிகரித்து கொடுத்ததன் காரணமாக இந்தியா அணி ஓரளவு வலுவான நிலையை அடைந்தது. பான்ட் 33 பந்துகளில் 66 ஓட்டங்களை பெற்றார். யஷாஸ்வி ஜய்ஷ்வால் 22 ஓட்டங்களையும், லோகேஷ் ராகுல், சுப்மன் கில் ஆகியோர் தலா 13 ஓட்டங்களை பெற்றனர். அவுஸ்திரேலியா அணியின் பந்துவீச்சில் ஸ்கொட் போலன்ட் 4 விக்கெட்களையும், பட்கம்மின்ஸ், பியூ வெப்ஸ்டர் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்களை கைப்பற்றினார்கள். இந்தியா அணி 145 ஓட்டங்களினால் முன்னிலையில் காணப்படுகிறது. 200 ஓட்டங்களுக்கு மேற்பட்ட வெற்றியிலக்கை துரத்தி பெறுவது கடினம் என கூறப்படுகிறது.
இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பாடிய இந்தியா அணி 72.2 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 185 ஓட்டங்களை பெற்றது. ரிஷாப் பான்ட் 40 ஓட்டங்களையும், ரவீந்தர் ஜடேஜா 26 ஓட்டங்களையும், ஜஸ்பிரிட் பும்ரா 22 ஓட்டங்களையும் பெற்றனர். ரோஹித் ஷர்மா இந்தப் போட்டியில் விளையாடவில்லை. பும்ரா தலைமை தாங்குகிறார். அவுஸ்திரேலியா அணியின் பந்துவீச்சில் ஸ்கொட் போலன்ட் 4 விக்கெட்களையும், மிட்செல் ஸ்டார்க் 3 விக்கெட்களையும், பட் கம்மின்ஸ் 2 விக்கெட்களையும் கைப்பற்றினார்கள்.
பதிலுக்கு துடுப்பாடிய அவுஸ்திரேலியா அணி உஸ்மன் காவஜாவின் விக்கெட்டை இழந்து .3 ஓவர்களில் 1 விக்கெட் இழப்பிற்கு 9 ஓட்டங்களை பெற்ற நிலையில் இன்று துடுப்பாட்டத்தை ஆரம்பித்தது. முதல் இன்னிங்சில் சகல விக்கெட்களையும் இழந்து 181 ஓட்டங்களை பெற்றது. துடுப்பாட்டத்தில் பியூ வெப்ஸ்டர் 57 ஓட்டங்களையும், ஸ்டீபன் ஸ்மித் 33 ஓட்டங்களையும், சாம் கொண்டாஸ் 23 ஓட்டங்களையும் பெற்றனர். இந்தியா அணியின் பந்துவீச்சில் மொஹமட் சிராஜ், பிரசித் க்ரிஷ்னா ஆகியோர் தலா 3 விக்கெட்களையும், ஜஸ்பிரிட் பும்ரா, நித்திஷ்குமார் ரெட்டி ஆகியோர் தலா இரண்டு விக்கெட்களை கைப்பற்றினார்கள். பும்ரா உபாதை காரணமாக முழுமையாக பந்துவீச முடியாமல் போனது இந்தியாவுக்கு பின்னடைவை ஏறபடுத்தியது. இருப்பினும் ஏனைய பந்துவீச்சாளர்கள் சிறப்பாக பந்துவீசி அவுஸ்திரேலியா அணியை கட்டுப்படுத்தினர்