வாத்துவையில் நபரொருவர் உயிரிழப்பு – பொலிஸ் அதிகாரிகள் நால்வர் கைது

வாத்துவையில் நபரொருவர் உயிரிழப்பு - பொலிஸ் அதிகாரிகள் நால்வர் கைது

களுத்துறை , வாத்துவை பொலிஸாரால் கைது செய்யப்பட்டு பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்ட பின்னர், உயிரிழந்த நபர் தொடர்பில் அந்த பொலிஸ் நிலையத்தின் அதிகாரிகள் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மீது தாக்குதல் மேற்கொண்ட குற்றச்சாட்டில் பாணந்துறை குற்றத்தடுப்பு விசாரணை பணியகத்தால் இன்று புதன்கிழமை மாலை அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன் ஒழுக்காற்று நடவடிக்கைகளுக்காக குறித்த நால்வரும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்தார்.

கைது செய்யப்பட்ட நால்வரும் நாளை (13) பாணந்துறை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தவுள்ளதுடன், பாணந்துறை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் தலைமையில் பாணந்துறை குற்றத்தடுப்பு விசாரணை பணியகத்தால் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

வாத்துவை தல்பிட்டியவைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கடந்த 10 ஆம் திகதி இரவு நடமாடும் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த அவரை வாத்துவை பொலிஸ் அதிகாரிகள் குழுவால் குறித்த நபர் கைது செய்யப்பட்டார்.

பின்னர், பிணையில் விடுவிக்கப்பட்ட அவர், வீடு திரும்பிய போது திடீர் சுகவீனமடைந்து பாணந்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

இது தொடர்பாக, அவரது உறவினர்கள் பாணந்துறை தெற்கு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்து பொலிஸாரால் அவர் தாக்கப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தியுள்ளனர்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version