நிலையான மீன்வளத்தை வலுப்படுத்துவது கலந்துரையாடல்

நிலையான மீன்வளத்தை வலுப்படுத்துவது கலந்துரையாடல்

ஐரோப்பிய ஆணையத்தின் கடல்சார் விவகாரங்கள் மற்றும் மீன்வளத்திற்கான இயக்குநரகத்தின் பிரதிநிதிகள் குழு, நேற்றைய தினம் (13.02) கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகரை அமைச்சகத்தில் சந்தித்தனர்.

சட்டவிரோத, அறிக்கையிடப்படாத மற்றும் ஒழுங்குபடுத்தப்படாத மீன்பிடி நடைமுறைகளை நிவர்த்தி செய்வதிலும், மீன்வளத் துறையில் ஒழுங்குமுறை இணக்கத்தை மேம்படுத்துவதிலும் இலங்கையின் முன்னேற்றம் குறித்து இந்த கலந்துரையாடலில் கவனம் செலுத்தப்பட்டது.

ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகள் இலங்கையின் முக்கிய கடல் உணவு இறக்குமதியாளர்களாக இருப்பதால், இந்த விஜயம் ஐரோப்பிய ஒன்றியத்தின் தொடர்ச்சியான ஈடுபாட்டை எடுத்துக்காட்டுவதாக அமைந்தது.

DG MARE(Directorate-General for Maritime Affairs and Fisheries) அதிகாரிகள் ஒரு வார காலமாக இலங்கையின் மீன்வள மேலாண்மை நடைமுறைகளை மதிப்பாய்வு செய்வதற்காக கடற்றொழில் திணைக்களம் மற்றும் கடற்றொழில் அமைச்சகத்துடன் இணைந்து பணியாற்றுகின்றனர்.

அவர்களின் வருகை இரண்டு முதன்மையான நோக்கங்களை கொண்டுள்ளது. நிலையான மீன்வள நிர்வாகம் குறித்த ஐரோப்பிய ஒன்றியத்தின் வழிகாட்டுதலுடன் இலங்கையின் செயற்பாடுகளை மதிப்பிடுதல் மற்றும் 2026 இல் நடைமுறைக்கு வரும் புதிய Digital catch certification முறையை அறிமுகப்படுத்துதல்.

2015 ஆம் ஆண்டு விதிக்கப்பட்ட இலங்கை கடல் உணவு மீதான ஐரோப்பிய ஒன்றியத்தின் ஏற்றுமதி தடை நீக்கப்படும்போது சட்டவிரோத, அறிக்கையிடப்படாத மற்றும் ஒழுங்குபடுத்தப்படாத மீன்பிடித்தலைத் தடுப்பதற்காக (Illegal, Unreported, and Unregulated) ஐரோப்பிய ஒன்றியம் வழங்கிய வழிகாட்டுதல்களை செயல்படுத்துவதில் இலங்கையின் முன்னேற்றம் குறித்து இக்குழுவினர் விரிவான மதிப்பாய்வை நடத்தி வருகின்றனர். இது சர்வதேச மீன்வள மேலாண்மை தரங்களை இலங்கை தொடர்ந்து கடைப்பிடிப்பதை உறுதி செய்கிறது.

இந்தக் கூட்டத்தின் போது, ​​நிலையான மீன்வளத்திற்கான இலங்கை அரசாங்கத்தின் உறுதிப்பாட்டை அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர் வலியுறுத்தினார் மற்றும் IUU மீன்பிடித்தலை எதிர்த்துப் போராடுவதற்கு எடுக்கப்பட்ட முக்கிய நடவடிக்கைகளை கோடிட்டுக் காட்டினார்.

நீண்டகாலமாக தாமதமாகி வரும் புதிய கடற்றொழில் சட்டவரைவு அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டு, தற்போது அடுத்த கட்ட நடவடிக்கைகளை நோக்கி முன்னேறி வருவதாக அமைச்சர் எடுத்துரைத்தார்.

கடற்றொழில் திணைக்களத்திற்கு படிப்படியாக மேம்பட்ட நிதி, மனித மற்றும் தொழில்நுட்ப வளங்களை வழங்கப்படுவதன் மூலம் கடற்றொழில் துறையை வலுப்படுத்தும் அதே வேளையில் சட்டவிரோத மீன்பிடித்தலைத் தடுக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் தெரிவித்தார்.

மேலும் மேற்கொள்ளப்பட்டுவரும் ஒழுங்குமுறை சீர்திருத்தங்கள் மற்றும் திறன் மேம்பாட்டு முயற்சிகளை முன்னெடுக்க ஐரோப்பிய ஒன்றியத்திடம் தொழில்நுட்ப உதவிகளையும் அமைச்சர் கோரினார்.

இலங்கையின் கடற்றொழில் துறைக்கான சந்தை அணுகல், தொழில்நுட்ப நிபுணத்துவம் மற்றும் நிதி உதவிகளை வழங்குவதில் ஐரோப்பிய ஒன்றியம் அளித்து வரும் தொடர்ச்சியான ஆதரவிற்கு அமைச்சர் இதன்போது நன்றி தெரிவித்தார்.

ஐரோப்பிய ஒன்றியத்துடனான கூட்டாண்மையை வலுப்படுத்துவதற்கும், நிலையான மீன்பிடி நடைமுறைகளை மேம்படுத்துவதற்கும், கடல் உணவு ஏற்றுமதியில் நிலையான வளர்ச்சியை உறுதி செய்வதற்கும் இலங்கையின் உறுதிப்பாட்டை அவர் மீண்டும் வலியுறுத்தியதோடு சந்தை வாய்ப்புகளை விரிவுபடுத்துவதிலும், இலங்கையின் கடற்றொழிலை மேலும் மேம்படுத்துவதிலும் ஐரோப்பிய ஒன்றியத்தின் தொடர்ச்சியான ஆதரவையும் வலியுறுத்தினார்.

இந்தக் கூட்டத்தில் இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றியத் தூதுவர் கார்மென் மொரேனோ, DG MARE பணிப்பாளர் பெர்னாண்டோ ஆண்ட்ரெசன் கினாரேஸ், DG MARE பிரிவின் தலைவர் ராபர்டோ செசாரி, இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றிய தூதரகத்தின் அரசியல், ஊடக மற்றும் தகவல் பிரிவின் தலைவர் லார்ஸ் பிரெடல் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி, கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சகத்தின் செயலாளர் சம்பத் மந்திரிநாயக்க, கடற்றொழில் திணைக்களத்தின் இயக்குநர் பணிப்பாளர் நாயகம் சுசந்த கஹவத்த ஆகியோரும் கலந்து கொண்டனர்

Social Share
FacebookTwitterRedditLinkedinPinterestMeWeMixWhatsapp

Leave a Reply Cancel reply

Exit mobile version