
மட்டக்களப்பில் உள்ள பிரச்சனைகள் தொடர்பாக பல காலமாக முன்வைத்த கோரிக்கைகளை நேற்றைய தினமும் புதிய அரசிடம் எடுத்துரைத்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தின் பாதுகாப்பு அமைச்சு சார் முதலாவது ஆலோசனைக் கூட்டம் பாராளுமன்றக் கட்டடத் தொகுதியில் நேற்றைய தினம் ஜனாதிபதி தலைமையில் நடைபெற்றது. இதன்போதே அவர் கோரிக்கைகளை முன்வைத்துள்ளார்.
இது தொடர்பில் அவர் தெரிவித்திருப்பதாவது,
மட்டக்களப்பில் உள்ள கையகப்படுத்தப்பட்ட இராணுவ முகாம்களான முறக்கொட்டான் சேனை, பாலையடி வட்டை, குருக்கள் மடம், காயங்கேணி, மற்றும் விமானப்படையினரால் கையகப்படுத்தப்பட்ட புதூர் மக்களுக்கு சொந்தமான நிலம், தாண்டியடி துயிலும் இல்லம், அதனுடன் களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலையம், மக்களுக்கு வழங்கப்படவேண்டிய மற்றும் மக்களுக்கு சொந்தமான வாகரை பிரதேச அரச காணிகளில் அநேகமானவை இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டு காணப்படுகின்றது.
இவை உட்பட்ட பல பொது மக்களுக்கு சொந்தமான நிலங்கள் விடுவிக்கப்பட வேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்பட்டதுடன் அதற்கான நடவடிக்கை மேற்கொள்ளவும் ஜனாதிபதியிடம் வலியுறுத்தப்பட்டது.
அதற்கு பதிலளித்த ஜனாதிபதி அதற்கான குழு ஒன்றினை நியமிப்பது தொடர்பில் ஆராய்வதாக உறுதி அளித்தார்.
அதனுடன் கடந்தகாலத்தில் திரிபோலி ஆயுத படைப்பிரிவினால் Tripoli Platoon இனால் மேற்கொள்ளப்பட்ட கொலைகள் தொடர்பான சாட்சிகளை விசாரிக்க புதிய குழு அமைக்க வேண்டுமென கோரிக்கை முன்வைத்திருந்தேன் அதனையும் உடனடியாக விசாரிக்க நடவடிக்கை எடுப்பதாக கூறியிருந்தார்” என தெரிவித்துள்ளார்.