கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் பிரதியமைச்சர் ரத்ன கமகே தலைமையில் மாகாண மீன்வள அமைச்சின் செயலாளர்களுக்கும் மத்திய அரசாங்க கடற்றொழில் அமைச்சின் பிரதானிகளுக்கும் இடையில் கலந்துரையாடலொன்று இடம்பெற்றது.
கடற்றொழில் அமைச்சின் கேட்போர் கூடத்தில் கடந்த 28 ஆம் திகதி இந்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.
இக்கூட்டத்தில் கடற்றொழில் அமைச்சும் மாகாண மீன்வள அமைச்சும் இணைந்து மீன்பிடித் தொழிலை மேம்படுத்துவது தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.
மேலும், மாகாண மட்டத்தில் கடற்றொழில் துறையை ஊக்குவிப்பதற்காக மத்திய அரசாங்கத்தின் கடற்றொழில் அமைச்சின் கீழ் உள்ள நிறுவனங்களால் வழங்கக்கூடிய சேவைகள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது.
கடற்றொழில் அமைச்சு புதிய வேலைத்திட்டத்தின் கீழ் முன்னோக்கி நகர்ந்து வருவதாகவும் மாகாண சபைகளுடன் இணைந்து திட்டங்களை தயாரித்து அமுல்படுத்த எதிர்பார்ப்பதாகவும் கடற்றொழில் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.
கடற்றொழில் தொடர்பில் கடந்த காலங்களில் மத்திய அரசும் மாகாண சபையும் இரண்டு வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்தியமையினால் பெருமளவு பணம் விரயமாகியுள்ளதாக சுட்டிக்காட்டிய அமைச்சர், மத்திய அரசாங்கமும் மாகாண சபையும் இணைந்து செயற்படுவதன் ஊடாக கடற்றொழில் பெரும் முன்னேற்றத்தை அடைய முடியும் என்றார். ஒரு நாட்டை அபிவிருத்தி செய்ய தனித்தனியாக எதுவும் செய்ய முடியாது, ஆனால் தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் மட்டத்தில் ஒன்றிணைவதன் மூலம், வளமான நாடு அழகான வாழ்க்கையை உருவாக்க முடியும் சந்திரசேகர் கூறினார்.
2025ஆம் ஆண்டுக்கான அரச வரவு செலவுத் திட்டத்தில் கடற்றொழில் அமைச்சுக்காக ஒதுக்கப்பட்ட நிதி கடந்த வருடங்களுடன் ஒப்பிடுகையில் 62.85% அதிகரிக்கப்பட்டுள்ளதாக கடற்றொழில் பிரதியமைச்சர் ரத்ன கமகே தெரிவித்தார்.