இந்திய மீனவர்களின் வருகை தடுக்கப்படும் – அமைச்சர் சந்திரசேகர்

இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடுவதைத் தடுப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படும் என கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.

இது தொடர்பில் இலங்கை கடற்படையினருக்கும் உரிய ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

யாழ். நெடுந்தீவு பகுதிக்கு நேற்று (29.04.2025) பயணம் மேற்கொண்டிருந்த அமைச்சர், மீனவ சங்கங்களின் பிரதிநிதிகளை சந்தித்து கலந்துரையாடினார்.

இதன்போது, இந்திய மீனவர்களின் அத்துமீறல் மற்றும் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையால் தமது வாழ்வாதாரத்துக்கு ஏற்படும் பாதிப்புகள் தொடர்பில் மீனவர்கள், அமைச்சரிடம் எடுத்துரைத்தனர்.

இந்திய மீனவர்களின் அத்துமீறலை தடுப்பதற்கு நிரந்தர பாதுகாப்பு பொறிமுறையொன்று அவசியம் எனவும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.

இதற்கு பதிலளித்த அமைச்சர், இந்திய மீனவர்களின் அத்துமீறலை தடுப்பதற்குரிய இராஜதந்திர நடவடிக்கை உட்பட அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படும் எனவும், இது தொடர்பில் கடற்படையினருக்கும் உரிய ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

கடற்றொழிலாளர்கள் எதிர்நோக்கும் சவால்கள் மற்றும் இறங்குத்துறை பிரச்சினை சம்பந்தமாகவும் கருத்துகள் முன்வைக்கப்பட்டன. அவை தொடர்பிலும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் உறுதியளித்தார்.

அதேவேளை, நெடுந்தீவு மக்களுடனும் அமைச்சர் கலந்துரையாடலில் ஈடுபட்டார். இதன்போது நெடுந்தீவு அபிவிருத்தி மற்றும் சுற்றுலாத்துறை மேம்பாடு தொடர்பிலும் அவதானம் செலுத்தப்பட்டது.

Social Share

Leave a Reply