கடன் தரப்படுத்தலில் தரமிறக்கப்பட்ட இலங்கை

கடனை மீள செலுத்துவதற்கான இயலுமையை அடிப்படையாகக் கொண்டு, Fitch எனப்படும் சர்வதேச கடன் தரப்படுத்தல் நிறுவனத்தினால் இலங்கை தரமிறக்கம் செய்யப்பட்டுள்ளது.

CCC தரத்திலிருந்து CC தரத்திற்கு சர்வதேச கடன் தரப்படுத்தல் நிறுவனத்தினால், இலங்கை இவ்வாறு தரமிறக்கப்பட்டுள்ளது.

வௌிநாட்டுக் கடன்களை மீள செலுத்துவதைத் தவிர்ப்பதற்கு அதிக வாய்ப்புள்ளது என்பதையே CC தரநிலை சுட்டிக்காட்டுகிறது.

இலங்கை, அடுத்த வருடம் ஜனவரி மாதத்தில் 500 மில்லியன் அமெரிக்க டொலர் பன்னாட்டு முறிகளை செலுத்த வேண்டியுள்ள காரணமாகவே, Fitch எனப்படும் சர்வதேச கடன் தரப்படுத்தல் நிறுவனத்தினால் இலங்கை தரமிறக்கப்பட்டுள்ளது.

இதனைத் தவிர அடுத்த வருடம் ஜூலை மாதத்தில் ஒரு பில்லியன் டொலர் பன்னாட்டு முறிகளையும் இலங்கை செலுத்த வேண்டியுள்ளது.

இலங்கை அடுத்த வருடத்தில் மாத்திரம் கடன் தவணை மற்றும் வட்டியாக 6.9 பில்லியன் அமெரிக்க டொலரை செலுத்த வேண்டியுள்ளதாக, Fitch நிறுவனம் விடுத்துள்ள புதிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது இந்த வருடத்தின் நவம்பர் மாதத்தில் இலங்கையிடம் உள்ள வௌிநாட்டுக் கையிருப்பின் 430 சதவீதமாகும். இலங்கையின் வௌிநாட்டுக் கையிருப்பு 1.6 பில்லியன் டொலர் வரை தற்போது குறைவடைந்துள்ளது.

இலங்கைக்கு அந்நிய செலாவணி கிடைக்கும் வழிமுறைகள் மற்றும் காலம் தொடர்பில் தௌிவற்ற தன்மை நிலவுவதாக Fitch நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.

இருதரப்பு மற்றும் பல்தரப்பு மூலங்களிலிருந்தும், குறை பயன்பாட்டுச் சொத்து ஊடாகவும் அடுத்த வருடத்தின் முதல் காலாண்டில் போதியளவு அந்நியச் செலாவணியை ஈட்ட முடியும் என, இலங்கை மத்திய வங்கி அண்மையில் வௌியிட்ட அரையாண்டு வழிகாட்டல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்தத் திட்டத்திற்கமைய, சீன வங்கியிடமிருந்து 1.5 பில்லியன் டொலர் செலாவணி பரிமாற்றத்தைப் பெறுவதற்கு எதிர்பார்க்கப்படுகிறது.

எனினும், சீனாவிடமிருந்து கிடைக்கும் பணத்தின் மூலம், இலங்கையில் அந்நியச் செவாவணியை அடிப்படையாகக் கொண்டு ஏற்பட்டுள்ள தாக்கத்திலிருந்து விடுபட முடியும் என எதிர்பார்க்க முடியாது என Fitch நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.

இதனைத்தவிர, இந்தியாவிடமிருந்து பொருளாதார சலுகை,தெற்காசிய வலய ஒத்துழைப்பாக 400 மில்லியன் டொலர் செலாவணி, கட்டார் மத்திய வங்கியிடமிருந்து செலாவணி பரிமாற்றம் உள்ளிட்ட பல வழிகளை இலங்கை அறிவித்துள்ள போதிலும், அடுத்த வருடத்தில் கடனைச் செலுத்துவது சவாலாக அமையும் என, சர்வதேச கடன் தரப்படுத்தல் நிறுவனம் தெரிவித்துள்ளது.

கடந்த 2020ஆம் ஆண்டிலிருந்து இதுவரை டொலருடன் ஒப்பிடுகையில் இலங்கை ரூபாவின் பெறுமதி 7.8 வீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளதாக, Fitch நிறுவனம் தெரிவிக்கின்றது.

மத்திய வங்கியின் தலையீட்டில் ரூபாவின் வீழ்ச்சி கட்டுப்படுத்தப்பட்டாலும், கையிருப்பு குறைவடைவதற்கு அதுவும் காரணமாக அமைந்துள்ளதாக Fitch நிறுவனத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அனைத்து விடயங்களையும் கருத்திற்கொண்டு, தரப்படுத்தல் பட்டியலில் Fitch நிறுவனம், இலங்கையை தரமிறக்கியுள்ளது.

இலங்கையை தரமிறக்குவதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கையை நிராகரிப்பதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

அனைத்து வௌிநாட்டுக் கடன்களும் செலுத்தப்படும் என உறுதியளிப்பதாக, அறிக்கையொன்றின் மூலம் இலங்கை மத்திய வங்கி அதனை தெரிவித்துள்ளது.

அத்துடன் இலங்கையின் வௌிநாட்டுத் தொழிலாளர்களின் வருமானம் மற்றும் ஏற்றுமதி வருமானத்தை எதிர்வரும் மாதங்களில் அதிகரிக்க முடியும் எனவும் மத்திய வங்கி நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

சீன மக்கள் வங்கியுடனான 1.5 பில்லியன் அமெரிக்க டொலர் பரிமாற்றம் இடம்பெறவுள்ளதாகவும் மத்திய வங்கி கூறியுள்ளது.

கடன் தரப்படுத்தலில் தரமிறக்கப்பட்ட இலங்கை
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version