இலங்கை பிரஜை ஒருவர் வெளிநாட்டு பிரஜை ஒருவரை திருமணம் செய்யும்போது பாதுகாப்பு அமைச்சு மற்றும் குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் அனுமதியும், பாதுகாப்பு சான்றிதழும் அவசியமென பதிவாளா் நாயகம் திணைக்கள அறிவித்துள்ளது.
வெளிநாட்டு பிரஜைகள் மற்றும் இலங்கையர்களுக்கு இடையிலான திருமண பதிவு செய்யும்போது, தேவையான ஆவணங்கள் தொடர்பில் தெளிவுப்படுத்தி பதிவாளா் நாயகம் திணைக்களத்தினால் அறிக்கையொன்று வெளியிடப்பட்டுள்ளது.
அதற்கமைய, திருமணத்தின் சாதாரண பதிவு செய்யும் கட்டளைச் சட்டத்துக்கமைய, வெளிநாட்டு பிரஜையொருவர் மற்றும் இலங்கை பிரஜையொருவருக்கு இடையில் திருமணமொன்றை பதிவு செய்யும்போது குறித்த வெளிநாட்டு பிரஜையினால் பெற்றுக்கொள்ளப்பட்ட சில முக்கிய ஆவணங்கள் கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும்.
அதற்கமைய, கடவுச்சீட்டு, சிவில் நிலையை உறுதிப்படுத்துவதற்கான ஆவணம், பிறப்புச் சான்றிதழ் என்பன சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
எனினும், வெளிநாட்டு பிரஜையொருவர் இலங்கை பிரஜையை பதிவுத் திருமணம் செய்யும்போது, பாதுகாப்பு அனுமதி உறுதிப்பத்திரத்தை (Security clearance) பெற்றுக்கொண்டதன் பின்னர் மேலதிக மாவட்ட பதிவாளரினூடாக அவ்வாறான திருமணங்களை செய்ய முடியமென தீர்மானிக்கப்பட்டுள்ளது.