பொதுநலவாய நாடுகளின் விளையாட்டு விழாவிற்கான கோல் அலரி மாளிகையில் வைத்து நேற்று (05/01) பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவால் வரவேற்கப்பட்டது.
பிரித்தானியாவின் பர்மிங்ஹாம் நகரில் இம்முறை நடைபெறவுள்ள 22ஆவது பொதுநலவாய நாடுகளின் விளையாட்டு விழாவை முன்னிட்டு உலகளாவிய ரீதியில் 72 நாடுகளுக்கு கொண்டு செல்லப்படுகின்ற இங்கிலாந்து மாகாராணியின் கோல் நேற்று பிற்பகல் அலரி மாளிகையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் வரவேற்கப்பட்டது.
25ஆவது நாடாக கடந்த 3ஆம் திகதி மாலைதீவிலிருந்து இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட கோல் மூன்று தினங்களாக நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் கொண்டு செல்லப்பட்டு நேற்று அலரி மாளிகைக்கு கொண்டுவரப்பட்டது.
இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர நாமல் ராஜபகஷவின் ஆலோசனையின் பேரில் இந்த கோலினை வரவேற்று காட்சிபடுத்துவதற்கான ஒருங்கிணைப்பு செயற்பாடுகளை முன்னெடுக்கும் பொறுப்பு இலங்கை தேசிய ஒலிம்பிக் குழுவிற்கு உத்தியோகப்பூர்வமாக வழங்கப்பட்டிருந்தது.
அதனை தொடர்ந்து தேசிய ஒலிம்பிக் குழுவின் தலைவர் சுரேஷ் சுப்ரமணியத்தினால் பிரதமரிடம் கோல் வழங்கப்பட்டது.
‘2022 Queen’s Baton Relay’ என்ற பெயரில் நடைபெறும் இந்த விசேட காட்சிபடுத்தல் திட்டம் பிரித்தானிய மகாராணியின் தலைமையில் கடந்த ஒக்டோபர் மாதம் 7ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது.
இந்நிலையில், இக்கோல் இலங்கையிலிருந்து பங்களாதேஷிற்கு கொண்டு செல்லப்படவுள்ளது.