இந்தியாவில் நடைபெறும் இலங்கை, இந்தியா அணிகளுக்கிடையிலான முதலாவது ஒரு நாள் சர்வதேசப் போட்டியில் விராத் கோலியின் சதம் மூலமாகவும், ரோஹித் ஷர்மா – சுப்மன் கில் ஆகியோரின் சிறந்த ஆரம்பம் மூலமாகவும் இந்தியா அணி பலமான ஓட்ட எண்ணிக்கையினை பெற்றுள்ளது.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி களத்தடுப்பை தெரிவு செய்தது. துடுப்பாட்ட வீரர்களுக்கு சாதகமான மைதானத்தில் இந்தியா அணி 50 ஓவர்களில் 07 விக்கெட்களை இழந்து 373 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.
ரோஹித் ஷர்மா, சுப்மன் கில் ஆகியோர் இணைந்து 143 ஓட்டங்களை ஆரம்ப விக்கெட் இணைப்பாட்டமாக 19.4 ஓவர்களில் பகிர்ந்து கொண்டனர். கில் 70(60) ஓட்டங்களை பெற்ற வேளையில் ஆட்டமிழந்தார். அதன் பின்னர் சகல இணைப்பாட்டங்களும் சராசரியான ஓட்டங்களை வழங்கியது. ரோஹித் ஷர்மா 83(67) ஓட்டங்களோடு ஆட்டமிழக்க விராத் கோலி மத்திய வரிசை வீரர்களோடு இணைப்பாட்டங்களை ஏற்படுத்தி ஓட்ட எண்ணிக்கையினை உயர்த்தினார்.
இறுதியில் 113 (87) ஓட்டங்களை அவர் பெற்றுக் கொடுத்தார். இது கோலியின் 45 ஆவது சதமாகும். சச்சினின் கூடுதலான சதங்கள் என்ற சாதனையினை தொட இன்னமும் 4 சத்தங்களே கோலிக்கு தேவை. இலங்கை அணிக்கெதிராக பெறப்பட்ட கூடுதலான சதங்கள் என்ற சச்சினின் சாதனையினை முறியடித்து 9 சதங்களை கோலி பெற்றுள்ளார்.
தனது முதற் போட்டியில் விளையாடிய டில்ஷான் மதுசங்க முதல் விக்கெட்டினை கைப்பற்றினார். இருந்தாலும் உபாதை காரணமாக மைதானத்தை விட்டு வெளியேறினார். கஸூன் ரஜித 2 விக்கெட்களையும், தஸூன் சாணக்க, தனஞ்சய டி சில்வா ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்களையும் கைப்பற்றினார்கள்.
