ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் ஏற்பாடு செய்யப்பட்டு நடைபெற்ற சர்வ கட்சி மாநாடு ஜனாதிபதி செயலகத்தில் இன்று காலை ஆரம்பித்து நிறைவடைந்துள்ளது. நாட்டின் தற்போதைய பொருளாதார வீழ்ச்சியினை மீட்டெடுக்க அனைத்து கட்சிகளும், பாராளுமன்ற உறுப்பினர்களும் இணைந்து செயற்படுதல் என்ற அடிப்படையில் இந்த மாநாடு நடைபெற்றது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இந்த மாநாடு நடைபெற்றது.
மாநாட்டில் உரையாற்றிய ஜனாதிபதி “இந்த மாநாடானது ஆராயலுக்கானதல்ல. இந்த கூட்டத்தை புறக்கணித்தவர்கள் கூட எதிர்காலத்தில் இணைந்து செயற்படுவார்கள். அவர்களது திட்டங்களும் சேர்த்துக் கொள்ளப்படுமென” தெரிவித்துள்ளார்.
“தற்போதைய சிக்கலான சூழிநிலையை தீர்ப்பது சகல அரசியலவாதிகளுக்குமான பொறுப்பென தான் நம்பியதாலேயே அனைவரையும் அழைத்ததாக” ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி சார்பாக முன்னாள் ஜனாதிபதியும் பாராளுமன்ற உறுப்பினருமான மைத்திரிபால சிரிசேன தலைமையில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்கள் பலர் கந்துகொண்டனர். இலங்கை தமிழரசுக் கட்சி சார்பாக பாராளுமன்ற உறுப்பினர்கள் சம்மந்தன், சுமந்திரன், புளொட் தலைவர் சித்தார்த்தன் மற்றும் ஆளும் பொதுஜன பெரமுனவின் பங்காளி கட்சிகள், அதன் பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் என பலர் இந்த மாநாட்டில் கலந்து கொண்டனர்.
ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் ரணில் விக்ரமசிங்கவும் இந்த கூட்டத்தில் பிரசன்னமாகி தனது கருத்துக்களை முன்வைத்திருந்தார்.
ஐக்கிய மக்கள் சக்தியி மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் இந்த மாநாட்டை புறக்கணித்திருந்தன. தமிழ் முற்போக்கு கூட்டணி, முஸ்லிம் கட்சிகளான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய கட்சிகளும் இந்த மாநாட்டில் கலந்து கொள்ளவில்லை.
தமிழ் தேசிய கூட்டமை சார்பாக டெலோ இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. சி.விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் தேசிய கூட்டணி, கஜேந்திரகுமார் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணி ஆகிய கட்சிகளும் இந்த மாநாட்டில் கலந்து கொள்ளவில்லை.