அத்தியாவசியப் பொருட்களுக்காக மக்கள் வரிசைகளில் நிற்கின்ற நிலைமைகளை உடனடியாக மாற்ற வேண்டும் என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான தெரிவித்துள்ள டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
உணர்ச்சிகளாலோ அல்லது சுயலாப அரசியல் நலன் சார்ந்த சிந்தனைகள் மூலமோ இந்த நிலைமையை மாற்ற முடியாது எனவும் அறிவு ரீதியாக அனைவரும் சிந்தித்துச் செயலாற்றுவதன் மூலமே மாற்றியமைக்க முடியும் என சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கை பற்றிய அறிக்கை தொடர்பாக அரசாங்கக் கட்சியினால் சமர்ப்பிக்கப்பட்ட சபை ஒத்திவைப்பு விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இதனை அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், எமது நிலை உணர்ந்து நிதி மற்றும் பொருள் உதவிகளை வழங்கி வருகின்ற இந்திய அரசுக்கும் இந்திய மக்களுக்கும் எமது மக்கள் சார்பாக தனது நன்றியைத் தெரிவித்திருந்த கௌரவ டக்ளஸ் தேவானந்தா, தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
‘எமது நாடு, பொருளாதார ரீதியில் ஓர் இக்கட்டான நிலையை எட்டியிருக்கின்ற வேளையில், அதற்கெதிரான மக்களது கோப வெளிப்பாடுகள் ஆர்ப்பட்டங்களாக ஆரம்பிக்கப்பட்ட நிலையில் இத்தகைய ஆர்ப்பாட்ட நிகழ்வுகள் சிலரின் திட்டமிடப்பட்ட அரசியல் நிகழ்ச்சி நிரல்களாக மாறி இன வன்முறைகளாக உருவெடுத்த சம்பவங்களையும் நாம் காணக்கூடியதாக இருக்கின்றது.
எமது பகுதிகளைப் பொறுத்த வரையில், பெரும்பான்மையாக தென் இலங்கையிலிருந்து சென்றவர்களினாலேயே இத்தகைய செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டதாக ஊடகங்களின் மூலம் அறிந்து கொள்ளக் கூடியதாக இருந்தது.
அரசுக்கெதிரான மக்கள் போராட்டம் என இவற்றை வகைப்படுத்த முற்பட்டாலும், அரசியல் பின்பலம் கொண்டவர்களே பெரும்பாலும் இத்தகைய ஆர்ப்பாட்டங்களில் அதிகளவில் பங்கேற்றிருக்கிறார்கள்.
இத்தகைய போராட்டங்கள், பிரச்சினைகளை வெளிக் கொண்டு வருகின்ற ஒரு வழிமுறையாக இருக்கின்ற போதிலும், நிலவுகின்ற பிரச்சினைகளுக்கான தீர்வுகளை இவற்றில் எதிர்பார்க்க முடியாது என்ற யதார்த்தத்தினையும் இப் போராட்டங்கள் தெளிவுபடுத்தியிருக்கின்றன.
அதே போன்று இப் பிரச்சினைகள் குறித்து கருத்துக்களை முன்வைக்கின்ற எதிர்தரப்பு அரசியல்வாதிகளும் தங்களது அரசியல் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப செயற்பட்டு, முடிந்தவரை ஆளுக்காள் திட்டித் தீர்ப்பதில் அக்கறை காட்டுகின்றனரே அன்றி, இப்பிரச்சினைகளுக்கான நடைமுறைச் சாத்தியமான தீர்வினை முன்வைப்பதாக இல்லை.குழம்பிய குட்டையில் மீன் பிடிப்பதற்கே அனைவரும் முயற்சித்துக் கொண்டிருக்கின்றனர்.
நான் ஏற்கனவே கூறி வருவதைப் போன்று இது இன்று நேற்று உருவான பிரச்சினையல்ல.
உங்களுக்குத் தெரியும் இந்த நாடு ஒரு காலத்தில் சிங்கப்பூருக்கு முன்னுதாரணமாக பொருளாதார ஸ்திரத் தன்மை கொண்டதாக இருந்தது. பல்வேறு இலவச நிவாரணத் திட்டங்களையும் செயற்படுத்தி வந்திருந்தது.
1977ஆம் ஆண்டில் ஜக்கியத் தேசியக் கட்சிக்குக் கிடைத்த மூன்றில் இரண்டு பெரும்பான்மையானது, நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை தோற்றுவித்ததுடன், திறந்த பொருளாதாரக் கொள்கையை அறிமுகப்படுத்தி, அதனை செயற்படுத்தியது.
இதன் பிற்பட்ட காலங்களில் எமது நாட்டின் தேசிய உற்பத்திப் பொருளாதாரமானது அழிந்தொழிந்து போயின.
தரகு முதலாளித்துவ நிலையிலான பொருளாதாரக் கொள்கை தொடர்ந்து வந்த ஆட்சியாளர்களால் அதிலிருந்து மீள முடியாதவாறு செயற்படுத்தப்பட்டு வந்ததன் விளைவையே இன்று நாம் அனுபவித்துக் கொண்டிருக்கிறோம்.
தற்போது ஏற்பட்டிருப்பது அதன் இறுதி வடிவமல்ல. இப்படியே தொடர்ந்தால் அதன் இறுதி வடிவம் மிக அண்மையிலேயே ஏற்பட வாய்ப்புண்டு.
மக்கள் தங்களது பிரச்சினைகளின் வெளிப்பாடுகளை சாத்வீகப் போராட்டங்களாக முன்னெடுப்பதை தவறென்று கூற முடியாது. மக்கள் தங்களது பிரச்சினைகளை பொது வெளிக்குக் கொண்டு வருகிறார்கள். இனி, அதற்கான தீர்வை நாம் முன்னெடுக்க வேண்டும்.
அண்மைக்காலமாக எரிபொருள், எரிவாயு, மின்சாரம் போன்ற தேவைகள் தடைப்பட்டுள்ளன. பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளன. மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதே வேளை கைத்தொழிற்துறைகளும் வெகுவாகவே பாதிக்கப்பட்டுள்ளன. கடற்றொழில் செயற்பாடுகளும் பாதிப்படைந்துள்ளன. கோவிட் 19 கொரோனா காரணமாக பெரிதும் பாதிக்கப்பட்டிருந்த சுற்றுலாத்துறையானது மெல்ல மெல்ல தலைதூக்கி வந்த வேளையில், அண்மைக் காலப் போராட்டங்கள் அதனையும் பாதிக்கச் செய்துள்ளது.
கடற்றொழில் அமைச்சைப் பொறுத்தவரையில். கடந்த ஆண்டு மீனின உற்பத்தியில் 318 மில்லியன் அமெரிக்க டொலர்களும், படகுகள் உற்பத்தியில் 37.81 மில்லியன் அமெரிக்க டொலர்களும் ஏற்றுமதி வருமானமாகக் கிடைத்துள்ளன என்பதையும் இங்கு தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன்.
பொருளாதார ரீதியில் இத்தகையதொரு சாதகமான நிலை நோக்கி சென்று கொண்டிருந்த வேளையிலேயே இன்றைய நெருக்கடி நிலைமை உருவெடுத்திருக்கின்றது.
இன்று இந்த நாட்டில் எரிபொருள், எரிவாயு, மின்சாரம் போன்ற விடயங்கள் அதிகம் பேசப்படுகின்ற தட்டுப்பாட்டு விடயங்களாக இருக்கின்றன.
தற்போது மருத்துவமனைகளில் மருந்துகளுக்கான தட்டுப்பாடுகள் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. நாளை இன்னும் இன்னும் தட்டுப்பாடுகள் வரலாம்.
எனவே, விரைந்த தீர்மானத்துக்கு நாங்கள் வரவேண்டும்.
விரைந்த தீர்வை நோக்கிச் செல்ல வேண்டும். சுழியில் சிக்கிக்கொண்டால் அதன் போக்கில் போய்த்தான் மீள முடியுமே தவிர, அதை எதிர்த்துக் கொண்டல்ல என்பதை அனைவரும் உணர வேண்டும்.
தற்போதைய நிலையில், சர்வதேச நாணய நிதியம் மற்றும் மாற்று வழிகள் தொடர்பில் சிந்தித்து செயலாற்றுவதே சந்தர்ப்பத்திற்கேற்ற செயற்பாடாகும் எனக் கருதுகின்றேன்.
அந்த வகையில், சர்வதேச நாணய நிதியத்தின் பரிந்துரைகளைப் பார்க்கின்றபோது, ஒரு சில விடயங்கள் மிகைப்படுத்தப்பட்டிருந்தாலும், ஏனைய விடயங்கள் தொடர்பில் நாங்கள் அறிவுசார்ந்து சிந்திக்க வேண்டியிருக்கிறது.
நாங்கள் கேட்கின்ற கடனுக்கான பரிந்துரைகளாக அல்லாத, சாதாரண அறிக்கையாகவே இது முன்வைக்கப்பட்டுள்ளது.
உணர்ச்சிகளாலோ, அல்லது சுயலாப அரசியல் நலன் சார்ந்த சிந்தனைகளாளோ இதனை தீர்மானிக்க இயலாது. அறிவு ரீதியாகவே தீர்மானிக்க வேண்டும் என்பதைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
அத்தியாவசியப் பொருட்களுக்கு மக்கள் வரிசைகளில் நிற்கின்ற நிலைமையை உடனடியாக நாம் மாற்றியாக வேண்டும்.
பொது மக்களின் பிரச்சினைகளுக்குப் பின்னால் இருந்து அரசியல் செய்வதென்பது எமது நாட்டில் இன்று நேற்று வந்த கலாசாரமல்ல என்பதால் நாம் விரைந்த மக்கள் நலக் கவனிப்புகளை முன்னெடுக்க வேண்டியவர்களாக இருக்கின்றோம்.
