தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின், தமிழக மக்களது பங்களிப்போடு இலங்கைக்கு மனித நேய உதவியாக வழங்கப்பட்ட நிவாரணப் பொதிகள் பகிர்ந்தளிப்பதில் தமிழ் மக்கள் புறக்கணிக்கப்பட்டுளளதாக ஐக்கிய மக்கள் சக்தி முல்லைத்தீவு மாவட்ட பிரதான அமைப்பாளர் லக்ஷயன் முத்துக்குமாரசாமி குற்றம் சுமத்தியுள்ளார்.
போரினால் அதிகம் பாதிக்கப்பட்ட வடக்கு மாவட்டங்களான முல்லைத்தீவு, வவுனியா மற்றும் மன்னார் மாவட்டங்களுக்கு வழமை போன்று அரசாங்கத்தினால் அநீதி இழைக்கப்பட்டுள்ளது . மன்னார், முல்லைத்தீவு மற்றும் வவுனியா மாவட்டங்களுக்கு ஒப்பீட்டளவில் சிறியளவு பொதிகளே ஒதுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். அத்தோடு இந்த செயற்பாட்டுக்கு தனது கண்டனங்களையும் அவர் தெரிவித்துள்ளார்.
“மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்கள் தமது வாழ்வாதாரமாக விவசாயம் , மீன்பிடித் தொழில்களைக் கொண்ட மாவட்டங்கள். உரத்தட்டுப்பாட்டினாலும் எரிபொருள் தட்டுப்பாட்டினாலும் பாதிக்கப்பட்டு பொருளாதாரரீதியிலான நெருக்குவாரங்களைச் சந்திக்கும் எமது மாவட்டங்களை சேர்ந்த மக்களுக்கு வழமையான புறக்கணிப்பினை இந்த அரசாங்கம் செய்திருப்பதானது கண்டிக்கத்தக்கது .
இலங்கையில் அதிக பெண் தலைமைத்துவ குடும்பங்களையும்அங்கவீனமுற்றவர்களையும் கொண்ட எமது மாவட்டங்களுக்கு உடனடியாக அதிக நிவாரணப் பொதிகளை அவதியுறும் மக்களுக்கு வழங்கி அவர்களின் பொருளாதாரப் பிரச்சினைக்கான தீர்வினைப் பெற்று கொள்வதற்கு இலங்கை அரசாங்கத்துக்கு அழுத்தங்களை பிரயோகிக்க இந்திய அரசும் தமிழக முதல்வரும் முன்வர வேண்டுமெனக் கேட்டுக் கொள்கின்றோம் . இவ் நிவாரணப் பொதிகள் இன மத அரசியல் பேதம் இ்ன்றி அனைத்து மக்களுக்கும் சமனாக பகிர்ந்தளிக்கச் செய்வதே எமது கோரிக்கை” என லக்ஷயன் முத்துக்குமாரசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
