இலங்கை, அவுஸ்திரேலிய ஒரு நாள் தொடர் நிறைவு

இலங்கை, அவுஸ்திரேலியா அணிகளுக்கிடையிலான ஐந்து போட்டிகளடங்கிய ஒரு நாள் சர்வதேசப் போட்டி தொடர் இன்று(24.06) நிறைவுக்கு வந்துள்ளது.

கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் நடைபெற்ற ஐந்தாவதும் இறுதியுமான போட்டியில் அவுஸ்திரேலியா அணி வெற்றிபெற்றது. இலங்கை அணி 3-2 என தொடரை கைப்பற்றியுள்ளது. 30 வருடங்களுக்கு பின்னர் இலங்கை அணி அவுஸ்திரேலிய அணியினை தொடரில் வெற்றி பெற்றுள்ளது.

இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பாடியது. 43.1 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து, 160 ஓட்டங்களை பெற்றது. இதில் சாமிக்க கருணாரட்ன 75 ஓட்டங்களையும், குஷல் மென்டிஸ் 25 ஓட்டங்களையும், ப்ரமோட் மதுசான் 15 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் ஜோஸ் ஹெசல்வூட், பட் கம்மின்ஸ், மத்தியூ குண்மன் ஆகியோர் தலா 2 விக்கெட்களை கைப்பற்றினார்கள்.

பதிலுக்கு துடுப்பாடிய அவுஸ்திரேலிய அணி 39.3 ஓவர்களில் 06 விக்கெட்களை இழந்து 161 ஓட்டங்களை பெற்று 04 விக்கெட்களினால் வெற்றி பெற்றது. இதில் அலெக்ஸ் கேரி ஆட்டமிழக்காமல் 45 ஓட்டங்களையும், கமரூன் கிரீன் ஆட்டமிழக்காமல் 25 ஓட்டங்களையும் பெற்றனர். இலங்கை அணியின் பந்துவீச்சில், டுனித் வெல்லாலகே 3 விக்கெட்களையும், மகேஷ் தீக்ஷன 2 விக்கெட்களையும் கைப்பற்றினார்கள்.

போட்டியின் நாயகனாக சாமிக்க கருணாரட்ன தெரிவு செய்யப்பட்டார். போட்டி தொடர் நாயகனாக குஷல் மென்டிஸ் தெரிவு செய்யப்பட்டார்.

இலங்கையின் நிலைமை மோசமாக காணப்படும் நிலையிலும், இலங்கைக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்ட அவுஸ்திரேலியா ஆணிக்கு இலங்கை ரசிகர்கள், மைதானத்திலும், வெளியிலும் தங்கள் நன்றிகளை வெளியிட்டு வருகின்றனர்.

இலங்கை, அவுஸ்திரேலிய ஒரு நாள் தொடர் நிறைவு
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version