இறுதி யுத்தத்தில் சரணடைந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பாக அனந்தி சசிதரன் உட்படடோரால் தாக்கல் செய்யப்பட்ட ஆட்கொணர்வு மனு மீதான தீர்ப்பு எதிர்வரும் செப்டம்பர் பதினைந்தாம் திகதி வழங்கப்படவுள்ளதாக சிரேஸ்ட சட்டத்திரணி இரட்ணவேல் தெரிவித்தார்.
இன்று வவுனியா மேல் நீதிமன்றத்தில் குறித்த வழக்கு தொடர்பான தீர்ப்பு வழங்கப்படவிருந்த நிலையில் மீண்டும் திகதி இடப்பட்டதன் பின்னர் இவ்விடயம் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்தும் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,
யுத்தத்தின் கடைசிப்பகுதியில் சரணடைந்து வலிந்து காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பான ஆட்கொணர்வு மனுக்கள் சம்பந்தமான வழங்கின் தீர்ப்பு வவுனியா மேல் நீதிமன்றத்தில் இன்று வழங்கப்பட இருந்தபோதிலும் நாட்டின் அசாதாரண நிலை காரணமாக இன்றும் பிற்போடப்பட்டுள்ளது.
இந்த வழக்கானது எதிர்வரும் செப்டம்பர் மாதம் 15 ஆம் திகதி தீர்ப்பு அறிவிக்கப்படும் என நீதிமன்றத்தினால் கூறப்பட்டுள்ளது.
ஆகவே செப்டம்பர் மாதம் 15 ஆம் திகதி வரை நாம் தீர்ப்புக்காக காத்திருப்போம் என தெரிவித்தார்.
ஏற்கனவே ஒரு தடவை இந்த வழக்கின் தீர்ப்பு போடப்பட்டே இன்று தீர்ப்பு வழங்குவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.