வர்த்தகர் தம்மிக்க பெரேராவை பாராளுமன்ற உறுப்பினராக நியமித்தமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட நான்கு அடிப்படை உரிமை மனுக்களை எதிர்வரும் செப்டெம்பர் 13ஆம் திகதி பரிசீலனை செய்ய உயர் நீதிமன்றம் இன்று தீர்மானித்துள்ளது.
தொழிலாளர் போராட்ட மத்திய நிலையத்தின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர், துமிந்த நாகமுவ, சி.பி.சிவந்தி பெரேரா, பி.எஸ்.குரே, பேராசிரியர் ஹரேந்திர சில்வா, மினோலி டி அல்மேதா, விசாகா பெரேரா, திலகரத்ன மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் உறுப்பினர் ரத்னஜீவன் ஹூல் உள்ளிட்ட சிலரால் இந்த மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மேலும்,பிரியந்த ஜயவர்தன, யசந்த கோதாகொட மற்றும் அர்ஜூன ஒபேசேகர ஆகிய நீதியரசர்களினால் மேற்குறிப்பிட்ட மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.
இதனைத்தொடர்ந்து தம்மிக்க பெரேராவின் நியமனம் சட்டவிரோதமானது என தெரிவிக்கும் மனுதாரர்கள், பாராளுமன்ற தேர்தலுக்காக சமர்ப்பிக்கப்பட்ட வேட்பாளர்கள் பட்டியலிலும் பெயரிடப்பட்ட தேசியப்பட்டியலிலும் தம்மிக்க பெரேராவின் பெயர் குறிப்பிடப்படவில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
தேர்தல் சட்டத்தின் பிரகாரம், பட்டியல்களுக்கு அப்பாற்பட்ட ஒருவரை தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக நியமிக்க முடியாது என மனுதாரர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
ஆகவே , இந்த நியமனம் தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை செல்லுபடியற்றதாக்குமாறு அவர்கள் நீதிமன்றத்தில் கோரியுள்ளனர்.
செய்திகள்