அரச பதவிகளை வகிப்பதாக கூறி மக்களை வெளிநாடுகளுக்கு அனுப்பும் புதிய வியாபாரத்தை பாராளுமன்ற உறுப்பினர்கள் முன்னெடுக்கின்றார்கள் என ஜே.வி.பி.யின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினர்களின் சிறப்புரிமைகளை பயன்படுத்தி பல பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்த ஆட்கடத்தலை மேற்கொண்டு வருவதாகவும் இதுவரையில் சுமார் நாற்பது பேர் பல்வேறு நாடுகளுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் முன்னாள் எம்.பி சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த வியாபாரத்தில் ஒருவரிடமிருந்து 30 முதல் 45 இலட்சம் ரூபா வரை அறவிடப்படுவதாகவும், இதற்கான ஆவணங்கள் ஒருவரின் பெயரில் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தற்போது பிரேசில், கொரியா, ஜப்பான் போன்ற நாடுகளுக்கு ஆட்கள் அனுப்பப்படுவதாகவும், இந்த கடத்தல் வியாபாரத்தினால் இலங்கை தொழிலாளர்களுக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்பை பறிக்கப்படுவது மட்டுமன்றி இந்த நாட்டின் நற்பெயருக்கு பாதிப்பை ஏற்படுத்துவதாகவும் தெரிவித்துள்ளார்.
எதிர்காலத்தில் இது குறித்து விசேட அறிவிப்பொன்றை வெளியிடத் தாம் தயார் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
