குருந்துவத்தை பிரதேச வைத்தியசாலையில் தவறான மருந்து கொடுக்கப்பட்ட காரணத்தால் கம்பளை பிரதேசத்தைச் சேர்ந்த 07 வயது சிறுமி உயிரிழந்துள்ளார்.
இந்த சிறுமிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து அவரது பெற்றோர்கள், குருந்துவத்தை பிரதேச வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்ற்றுள்ளனர். அங்கு ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட அச்சிடப்பட்ட காகிதத்தில் மருந்து எழுதி கொடுக்கப்பட்டுள்ளது.
மருந்து சீட்டை பெற்றுக்கொண்ட பெற்றோர் வைத்தியசாலையில் உள்ள மருந்தகத்தில் மருந்தைப் பெற்றதாகவும், வீடு திரும்பிய பின்னர் சிறுமி மருந்தை உட்கொண்டதாகவும், இதனால் வயிற்றுப்போக்கு ஏற்பட்டு மேலும் பலவீனமடைந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
சிறுமி மிகவும் சுகவீனமடைய இரண்டாவது தடவையாகவும் மருத்துவமனைக்குச் அழைத்து செல்லப்பட்டபோது வேறு அறிகுறிகளைக் காட்டியதால், சிறுமியின் பெற்றோர்கள், கம்பளை ஆதார வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அப்போது குறித்த சிறுமிக்கு முதியவர்களுக்கு வழங்கப்பட்ட மருந்துகள் பரிந்துரைக்கப்பட்ட்டுள்ளமையும், சிறுமி அதனை உட்கொண்டுள்ளமையும் தெரியவந்துள்ளது.
குருந்துவத்தை பிரதேச வைத்தியசாலையில் அச்சிடப்பட்ட தாளில் ஏற்கனவே வயோதிப நோயாளர் ஒருவருக்கு வழங்கப்பட்ட மருந்துகள் பரிந்துரைக்கப்பட்டிருந்தமையும் கண்டறியப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் காரணமாக, கம்பளை ஆதார வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட சிறுமி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குருந்துவத்தை பிரதேச வைத்தியசாலையில் காகிதம் இல்லாத காரணத்தினால் ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட மருந்து சீட்டு தாள்களை பயன்படுத்தியதாகவும் அதன் காரணமாகவே சிறுமிக்கு தவறான மருந்துகள் விநியோகிக்கப்பட்டுள்ளதாகவும் இதன் விளைவாக குழந்தை உயிரிழந்துள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.