ஜனாதிபதி வேட்பாளராக சஜித்

ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பளாராக ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான சஜித் பிரேமதாச இன்று(16.05) தெரிவு செய்யப்பட்டுள்ளார். கூட்டம் இன்று நடைபெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் செயற்குழுக் கூட்டத்தில் இந்த முடிவு உட்பட மேலும் பல முக்கிய விடயங்கள் பேசப்பட்டு முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் ஊடக பிரிவு அறிவித்துள்ளது.

“இன்று நடைபெற்ற செயற்குழுக் கூட்டத்தில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சுஜீவ சேனசிங்கவும் கலந்து கொண்டதோடு, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கு நம்பகமான தலைவர் வேறு எவரும் இல்லை எனவும், நம்பகமான தலைவர் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மாத்திரமே எனவும் அவர் தெரிவித்தார்.

இதன் பிரகாரம், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான ஐக்கிய மக்கள் கூட்டணியில் சஜித் பிரேமதாசவே போட்டியிட வேண்டும் என சுஜீவ சேனசிங்க மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா ஆகியோர் முன்மொழிந்ததோடு, இதற்கு செயற்குழு ஏகமனதாக ஒப்புதல் அளித்தது” என ஊடக பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான கூட்டணியை கட்டியெழுப்ப தாம் செயற்படுவதாகவும், இதற்குத் தேவையான உள்ளக மற்றும் வெளியக ரீதியான பொறுப்புகளை தாம் ஏற்றுக்கொள்வதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச செயற்குழுவில் தெரிவித்துள்ளார்.

குறித்த கூட்டணியை கட்டியெழுப்பும் போது, ஐக்கிய மக்கள் சக்தியின் கொள்கை மற்றும் வேலைத்திட்டத்தை ஏற்றுக்கொள்ளும் தரப்புகளுடன் உரிய கூட்டணி கட்டியெழுப்பப்படும் எனவும் எதிர்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

ஒழுக்காற்றை மீறுபவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார, தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க மற்றும் எதிர்க்கட்சியின் பிரதம கொறடா லக்ஷ்மன் கிரியெல்ல ஆகியோர் பணிக்கப்பட்டனர் எனவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Social Share

Leave a Reply