தேசிய ஒளடத ஒழுங்குப்படுத்தல் அதிகார சபையில் பாரிய ஊழல் மோசடிகள் இடம்பெற்றுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
அரசாங்க மருந்தாளர்கள் சங்கத்தின் உறுப்பினர்கள் இன்று(27.06) எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவைச் சந்தித்து தேசிய ஒளடத ஒழுங்குப்படுத்தல் அதிகார சபையில் உள்ள பிரச்சினைகள் குறித்து தெளிவூட்டினர். இதனைத் தொடர்ந்து கருத்து வெளியிட்ட அவர் மேற்படி கூறியுள்ளார்.
இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், தேசிய ஒளடத ஒழுங்குப்படுத்தல் அதிகார சபையில் பாரிய ஊழல் மோசடிகள் இடம்பெற்றுள்ளன, அதன் பணிப்பாளர் சபை பூர்த்தியற்று காணப்படுகிறது.
அத்துடன் அங்கு நிபுணர்களின் பற்றாக்குறை நிலவுகிறது, இது குறித்து சம்பந்தப்பட்ட அமைச்சரும் செயலாளரும் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
எமது நாட்டின் ஒளடதம் தொடர்பான சட்ட விதிமுறைகள் ஏற்பாடுகளின் பிரகாரம், மருந்துப் பொருட்களை பதிவு செய்வதற்கான முறையான செயல்முறை உள்ளது.
அவசரகால சூழ்நிலையில் செயல்படுத்தப்பட வேண்டிய முறையொன்று இருந்தாலும் அந்த முறைமையை பயன்படுத்தி மருந்துப்பொருட்கள் பதிவு செய்யப்படுவதையும் தவிர்த்து தவறான முறையில் ஒளடத அதிகார சபையின் தலைவர் கொள்வனவு செய்துள்ளார்.
இதன் காரணமாக தரமற்ற மருந்துப்பொருட்களை சந்தைக்கு விநியோகிக்கும் வேலைத்திட்டமொன்று அமுல்படுத்தப்பட்டிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. இதன் காரணமாக கடந்த காலங்களில் பல்வகையான மருந்துபொருட்கள் தொடர்பில் பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
தமது மருந்து மாபியாவை பாதுகாக்கும் நோக்கில் இந்நிறுவனத்தின் சேவையாற்றிய 23 சிரேஷ்ட உறுப்பினர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
மருந்து விலை ஒழுங்குமுறைக் குழுவை கலைத்து,பிரதம நிறைவேற்று அதிகாரி தனது சொந்த பிரப்பாணைகளின் பிரகாரம் விலை நிர்ணயம் செய்து வருவருகிறார்.
பாராளுமன்றத்தின் கடமை மற்றும் பொறுப்பின் கீழ் அவர்கள் பதிலளிக்க கடமைப்பட்டுள்ளனர். எதிர்க்கட்சியாக, 220 இலட்சம் மக்களுக்கும் இந்த ஊழல் கொடுக்கல் வாங்கல் கண்டறிதலை வெளிப்படுத்துவோம்.
இது நாட்டிற்கு பெரும் பாதகமாக அமையும் என்பதால் ஊழல் மோசடிகள் தொடர்பில் ஆராயப்பட்டு இது தொடர்பில் கவனம் செலுத்துவோம்’ எனத் தெரிவித்துள்ளார்.