இலங்கையிலும் திருப்பதி கோவில் கட்ட வேண்டும் – செந்தில் தொண்டமான்!

ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியை சந்தித்துப் பேசிய கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், இலங்கையில் திருப்பதி கோயில் கட்ட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்தியாவின் ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள திருப்பதி கோவிலுக்குச் செல்ல விரும்பும் ஏராளமான பக்தர்கள், பொருளாதார நிலை காரணமாக பயணம் செய்ய முடியாத நிலையில் உள்ளதைக் கருத்தில் கொண்டே ஆளுநர் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், வயது மூப்பு காரணமாக யாத்திரை மேற்கொள்ள விரும்பும் கணிசமான எண்ணிக்கையிலான பக்தர்களால் இந்தியாவுக்கு யாத்திரைக்கு செல்ல முடியாதுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆளுநர் செந்தில் தொண்டமான் விடுத்த இந்த கோரிக்கைக்கு முதல்வர் ரெட்டி சாதகமாக பதிலளித்ததாக அவர் தரப்பு தெரிவித்துள்ளது.

தற்போது இந்தியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஆளுநர் தொண்டமான், ஆந்திர பிரதேச வர்த்தக சம்மேளன அதிகாரிகளையும் சந்தித்து இலங்கையில் முதலீடு செய்வதற்கான வாய்ப்புகள் தொடர்பிலும், விவசாயம் மற்றும் ஆடைதுறைகளில் ஆந்திர அதிகாரிகளுடன் இருதரப்பு ஒத்துழைப்பு குறித்தும் கலந்துரையாடியுள்ளார்.

மேலும், இக்கலந்துரையாடலின் போது, திருகோணமலை துறைமுகத்தில் கைத்தொழில் மையங்கள் அமைப்பது தொடர்பிலும், கரும்பு மற்றும் மிளகாய் பயிர்ச்செய்கைகளை அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version