இலங்கை-தமிழக, மலையக தமிழர் தோழமை இயக்கம் தமிழ்நாட்டில் உதயம்

தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசனை கெளரவ தலைவராக கொண்டு தமிழ்நாட்டில் இலங்கை-தமிழக மலையக தமிழர் தோழமை இயக்கம் அங்குரார்ப்பனம் செய்து வைக்கப்பட்டது.

தமிழ்நாடு திருச்சியில் நேற்று முன் தினம்(05.07) நடைபெற்ற அங்குரார்ப்பன நிகழ்வில் இலங்கை-தமிழக மலையக தமிழர் தோழமை இயக்கத்தின் தலைமைக்குழு உறுப்பினர்களாக, கெளரவ தலைவர்-இலங்கை எம்பி மனோ கணேசன், தலைவர்- எம். எஸ் செல்வராஜ், துணை தலைவர்கள்-பி.டி. ஜோன்,கே. ஏ. சுப்பிரமணியம், மிசா மாரிமுத்து, செயலாளர்- சட்டத்தரணி தமிழகன், துணை செயலாளர்கள்- சட்டத்தரணி ஈசன், டார்வின் தாசன் ஆகியோரும், செயற்குழு உறுப்பினர்களாக திருமதி செல்வராணி, திருமதி கலா மற்றும் ஆலோசகர் குழு உறுப்பினர்களாக முனைவர் ஸ்டீபன் ஆன்டணி, பிஜோய், சிவஞானம், டி. எஸ். எஸ். மணி, அஜித் மேனன் ஆகியோரும் நியமிக்கபட்டுள்ளனர் என தமிழகம் சென்று மாடு திரும்பிய பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

“இது ஒரு வரலாற்று முகியத்துவம் மிக்க நாள். இலங்கையில் வாழும் இந்திய-தமிழக வம்சாவளி மலையக தமிழரும், இந்திய தமிழகத்துக்கு தாயகம் திரும்பியதாக சொல்லப்படும் தமிழகத்தில் வாழும் மலையக தமிழரும் அமைப்பு ரீதியாக ஒன்றுபடும் நாள்” என இலங்கை-தமிழக மலையக தமிழர் தோழமை இயக்க அங்குரார்ப்பன நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துக்கொண்ட உரையாற்றிய, இலங்கையின் கொழும்பு மாவட்ட எம்பியும், தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

“இதன்மூலம் இலங்கையில் வாழும் இந்திய தமிழக வம்சாவளி மலையக தமிழர் எதிர்நோக்கும் பிரச்சினைகள், அவர்களது அபிலாஷைகள் தொடர்பில் தமிழகத்தில் புதிய ஒளி பாய்ச்சப்படுகிறது. அதேபோல் தாயகம் திரும்பியதாக சொல்லப்பட்டு தமிழகத்தில் வாழும் மக்களின் துன்பங்களையும் அறிய கூடியதாக இருக்கிறது.

இலங்கையில் ஏறக்குறைய பதினைந்து இலட்சம் இந்திய-தமிழக வம்சாவளி மலையக தமிழர் வாழ்கிறார்கள். அதேபோல் தாயகம் திரும்பியதாக சொல்லப்படுவோர் தமிழகத்தில் இருபத்தி ஐந்து இலட்சம் பேர் வாழ்கிறார்கள். ஆக மொத்தம் நாற்பது இலட்சம்.

இந்த இருபத்தி ஐந்து இலட்சம் பேருடன் சேர்த்து மொத்தம் நாற்பது இலட்சம் பேரும் இலங்கையில் குடியுரிமையுடன் வாழ்ந்திருக்க வேண்டும். வாழ்ந்திருந்தால் இலங்கை பாராளுமன்றத்தில், நாம் நாற்பது எம்பிகள் இருந்திருப்போம். அதன்மூலம் அரசியல்ரீயாக நாம் பலம் பெற்று இருந்திருப்போம். எம்மை மீறி எவரும் இலங்கையில் அரசு அமைக்க முடியாது. ஆகவே எமது உரிமைகள் இன்றைய நிலைமையை போல் பறிக்கப்படும் நிலைமை ஒருபோதும் உருவாகி இருக்காது.

ஆனால், 1948ல் எமது குடியுரிமை பறிக்கப்பட்டது. அப்புறம் வாக்குரிமை பறிக்கப்பட்டது. இனவாத அரசை எதிர்த்து அன்றைய நமது தொழிற்சங்க தலைமைகள் மக்களை அணி திரட்டி போராட்டங்களை செய்ய தவறினார்கள். அப்போது காத்திரமாக செயற்பட்டு இலங்கை அரசை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர தவறிய, இந்திய அரசு, அதன் பின் 1964 எம்மிடம் கலந்து ஆலோசிக்காமலேயே பெருந்தொகையான எமது மக்களை இந்தியாவுக்கு திருப்பி எடுத்து எம்மை பலவீனமடையவும் செய்து விட்டது.

அன்று அப்படி தாயகம் திரும்பிய மக்களின் வாழ் நிலைமையும் மிகவும் மோசமாகவே இருக்கிறது. இவர்களுக்கு சரியான நல்வாழ்வு திட்டங்களை அமைத்து தர இந்திய அரசு தவறி விட்டத்தையும் இன்று நான் கண்கூடாக காண்கிறேன்.

மறுபுறம், 1948 முதல் 1972 வரை, இலங்கை பிரிட்டீஷ் முடியாட்சியின் கீழ்தான் இருந்தது. அதன்பிறகுதான் இலங்கை குடியரசானது. குடியுரிமை, வாக்குரிமை பறிக்கப்பட்டபோதும்,1956 சிங்களம் மட்டும் சட்டம் கொண்டுவரப்பட்டபோதும், 1964ல் சிறிமா-சாஸ்திரி ஒப்பந்தம் செய்யப்பட்ட போதும், பிரிட்டீஷ் அரசு வாய் திறக்கவில்லை. அன்றைய நமது தொழிற்சங்க தலைமைகளும் இந்த அநீதிகளை பிரிட்டீஷ் முடியாட்சிக்கு எடுத்து கூறி, நியாயம் கேட்கவும் இல்லை. எல்லாவற்றுக்கும் மேல் எமது மூதாதையினரை 1823 முதல் இலங்கைக்கு கொண்டு சென்று, தமக்கு ஏற்றுமதி வருவாய் தந்த பெருந்தோட்டங்களை அமைத்ததும், பிரிட்டீஷ் முடியாட்சித்தான்.

ஆகவே இந்த ஒட்டு மொத்தம் நாற்பது இலட்சம் தமிழர்கள் தொடர்பாக இலங்கை அரசு, இந்திய அரசு, பிரிட்டீஷ் அரசு ஆகியவற்றுக்கு பெரும் தார்மீக பொறுப்பும், கடமையும் இருக்கின்றன. இந்த அரசுகள் தமது தேசிய சொந்த நலன்களுக்காக இனியும் நம்மை எடுப்பார் கைப்பிள்ளைகளாக பயன்படுத்த விட முடியாது. இந்த மூன்று அரசுகளும் முன்வந்து எமக்கான நல்வாழ்வு திட்டங்களை அமைத்து தர வேண்டும். அதை நாம் இனி தேசிய, சர்வதேசிய அரங்குகளில் வலியுறுத்தி தீர்வுகளை தேடி பெறுவோம். இலங்கை-தமிழக மலையக தமிழர் தோழமை இயக்கத்தின் மூலம் இந்த நோக்கங்களை நாம் வலியுறுத்துவோம்” என மனோ கணேசன் தனது உரையில் கூறினார்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version