இலங்கை, பாகிஸ்தான் அணிகளுக்கிடையில் நடைபெற்று வரும் டெஸ்ட் போட்டி தொடரின் முதற் போட்டி கடந்த 16 ஆம் திகதி காலி சர்வதேசக் கிரிக்கெட் மைதானத்தில் ஆரம்பித்து நடைபெற்று வருகிறது. மூன்றாவது நாள் ஆட்ட நேர முடிவில் இலங்கை அணி இரண்டாம் இன்னிங்சில் 14 ஓட்டங்களை பெற்றுள்ளது.
தமது முதல் இன்னிங்ஸின் ஆரம்பத்தில் பாகிஸ்தான் அணி தடுமாறிய போதும், சௌட் ஷகீலின் அபாரமான கன்னி இரட்டைச்சதத்தின் மூலம் பலமான முன்னிலையை பெற்றுள்ளது. சௌட் ஷகீல். நசீம் ஷா இருவரும் ஒன்பதாவது விக்கெட்டுக்காக சத இணைப்பாட்டத்தை ஏற்படுத்தியமை சுட்டிக்காட்டத்தக்கது. பாகிஸ்தான் அணி 121.2 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 461 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.
முன்னதாக பாகிஸ்தான் அணி சார்பாக சௌட் ஷகீல், அகா சல்மான் ஆகியோர் 177 ஓட்டங்களை ஆறாவது விக்கெட் இணைப்பாட்டமாக பெற்று தடுமாறிய பாகிஸ்தான் அணியை மீட்டு எடுத்தனர். சௌட் ஷகீல் 69 ஓட்டங்களோடு இன்று துடுப்பாட்டத்தை ஆரம்பித்து ஆட்டமிழக்காமல் 208 ஓட்டங்களோடு நிறைவு செய்தார். அகா சல்மான் 83 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார். ஷான் மசூட் 39 ஓட்டங்களை பெற்றுக் கொடுத்தார். நைம் ஷா 78 பந்துகளை எதிர்கொண்டு 06 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார்.
இலங்கை அணியின் பந்துவீச்சில் ரமேஷ் மென்டிஸ் 05 விக்கெட்களையும், பிரபாத் ஜயசூர்யா 3 விக்கெட்களையும், கஸூன் ரஜித, விஸ்வ பெர்னாண்டோ ஆகியயோர் தலா ஒவ்வொரு விக்கெட்டை கைப்பற்றினர்.
இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி இலங்கை அணியை துடுப்பாட பணித்தது.
முன்னதாக இன்று இலங்கை அணி 95.2 ஓவர்களை எதிர்கொண்டு சகல விக்கெட்களையும் இழந்து 312 ஓட்டங்களை பெற்றது. இதில் தனஞ்சய டி சில்வா 122 ஓட்டங்களையும், அஞ்சலோ மத்தியூஸ் 64 ஓட்டங்களையும், சதீர சமரவிக்ரம 36 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் ஷஹின் ஷா அப்ரிடி, நசீம் ஷா, அப்ரார் அஹமட் ஆகியோர் தலா 3 விக்கெட்களை கைப்பற்றினார்கள். ஷஹின் ஷா அப்ரிடி இதன் மூலம் 100 விக்கெட்களை கைப்பற்றிய பந்துவீச்சாளராக தன் பெயரை பதிவு செய்துள்ளார்.
இலங்கை அணியின் ஆரம்பத்தில் எதிர்பார்த்தது போன்றே பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஷஹின் ஷா அப்ரிடி இலங்கை அணியின் ஆரம்ப விக்கெட்களை பதம் பார்க்க, இலங்கை அணி தடுமாறிப் போனது. பலமான துடுப்பாட்ட வீரர்கள் என எதிர்பார்க்கப்பட்ட முக்கிய நான்கு வீரர்கள் 54 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தனர். அதன் பின்னர் ஜோடி சேர்ந்த அஞ்சலோ மத்தியூஸ், தனஞ்சய டி சில்வா ஆகியோர் இணைந்து இலங்கை அணியை மீட்டெடுத்தனர். 131 ஓட்டங்களை இருவரும் இணைப்பாட்டமாக பெற்றுக் கொண்டனர். அஞ்சலோ மத்தியூஸ் 64 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். அதன் பின்னர் சதீர சமரவிக்ரம, தனஞ்சய ஜோடி இணைப்பாட்டம் ஒன்றை உருவாக்கி 57 ஓட்டங்களை பகிர்ந்த வேளையில் சதீர ஆட்டமிழந்தார்.
இன்று தனித்து நின்று துடுப்பாடிய தனஞ்சய டி சில்வா தனது பத்தாவது சதத்தை பூர்த்தி செய்தார். பத்து சதங்களை பெற்ற பன்னிரண்டாவது வீரராக தனது பெயரை பதிவு செய்துள்ளார். இந்த போட்டி அவரின் ஜம்பவாது போட்டியாகும்.