நெடுங்கேணி கொலை தொடர்பில் ஒருவர் கைது!

வவுனியா, நெடுங்கேணி பொலிஸ் பிரிவில் பட்டிக்குடியிருப்பு கிராமத்தில் ஒருவரை சுட்டுக் கொன்ற சந்தேகநபர் இன்று (22.07) காலை கைது செய்யப்பட்டதாக நெடுங்கேணி பொலிசார் தெரிவித்தனர்.

வவுனியா வடக்கு, பட்டிக்குடியிருப்பு பகுதியில் நேற்று (21) மாலை அழகையா மகேஸ்வரன் (58) என்பவர் இடியன் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டிருந்தார்.

விவசாயியான அவர், தனது தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த போது, பக்கத்து தோட்டத்தில் நின்ற ஒருவருடன் ஏற்பட்ட தகராறு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து இந்த கொலை நடந்ததாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

உயிரிழந்தவருக்கும், கொலையாளிக்குமிடையில் தோட்ட எல்லை தொடர்பாக நீண்டகாலமாக முறுகல் காணப்படுவதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

நேற்றும் முறுகல் ஏற்பட்டுள்ளது. அப்போது, மகேஸ்வரன் மீது கொலையாளி கல் வீசி தாக்கியுள்ளார். இதனால் கோபமடைந்த மகேஸ்வரன், மண்வெட்டியை எடுத்துக் கொண்டு விரட்டிச் சென்றுள்ளார்.

தப்பியோடியவர் பக்கத்திலுள்ள தனது வீட்டுக்கு சென்று, அங்கிருந்த இடியன் துப்பாக்கியை எடுத்து வந்து சுட்டதில், மகேஸ்வரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

உயிரிழந்த இருவரும் விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் போராளிகள். மகேஸ்வரன் யுத்தத்தின் பின் புனர்வாழ்வளிக்கப்பட்ட பின்னர் விடுவிக்கப்பட்டார்.

39 வயதான கொலையாளி ஒன்றரை வருடமளவில் விடுதலைப் புலிகள் அமைப்பில் உறுப்பினராக இருந்தவர், யுத்தம் முடிவதற்கு முன்னரே அந்த அமைப்பை விட்டு விலகி விட்டார். 

அவர் மீது சுமார் 5 வரையான வழக்குகள் உள்ளது. கடந்த வாரம் சட்டவிரோதமாக இடியன் துப்பாக்கி வைத்திருந்த குற்றச்சாட்டில் பொலிசாரால் கைது செய்யப்பட்டிருந்தார். 20ஆம் திகதி வவுனியா நீதிமன்றத்தால் அவருக்கு தண்டப்பணம் விதிக்கப்பட்டிருந்தது. 

அன்றைய தினமே தண்டப்பணத்தை செலுத்தி விட்டு வந்து, மற்றொரு இடியன் துப்பாக்கியை பெற்று அதன் மூலமே சூடு நடத்தியுள்ளதாக அறிய முடிகிறது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version