யானைக்கு விஷம் வைத்த இருவர் கைது!

கதிர்காமம் பகுதியில் உள்ள விகாரை ஒன்றில் யானைக்கு விஷம் கலந்த பழங்களை உண்ணக் கொடுத்த  இருவரை கதிர்காமம் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

 சம்பவம் தொடர்பில் மேலும் ஒருவரை கைது செய்வதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.  

கதிர்காமம் பகுதியிலுள்ள விகாரை ஒன்றில் நேற்றுமுன்தினம் (19.08) தங்கியிருந்த “அசேல” என்ற யானைக்கு பழங்களை வழங்கியதையடுத்து, அந்த யானையின் வாயில் இருந்து சளி வழிந்துள்ளது. 

இது குறித்து யானை பண்ணையாளர் சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு தெரியப்படுத்தியதையடுத்து, கால்நடைத்துறை அதிகாரிகள் யானைக்கு சிகிச்சை அளித்துள்ளனர்.  

எனினும் யானையை பரிசோதித்த கால்நடை வைத்தியர்கள், யானை விஷம் கலந்த ஒன்றை சாப்பிட்டதாகவும், ஆனால் விஷம் உடல் முழுவதும் பரவவில்லை எனவும் தெரிவித்துள்ளனர். 

இதனையடுத்து  கதிர்காமம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது. அங்கு மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பின்னர் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், யானையை பராமரித்து வந்த யானை வளர்ப்பாளர் கொடுத்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் தர்பூசணியில் விஷம் கலந்து யானைக்கு வழங்கியதாக தெரிவித்துள்ளனர்.

அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் மற்றுமொருவரை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. 

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version