அதிகாரத்திற்கு பேராசை மிக்க ஜனாதிபதி கனவுகளை கொண்ட அரசியல்வாதிகள் சிலர் 2019 இல் செய்த ஏமாற்றத்தை மீண்டும் செய்ய முயற்சிக்கின்றனர் என எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
தொடம்கஸ்லந்த ஸ்ரீ சைலத்தலாராம விகாரையில் தூபியைத் திறந்து வைக்கும் நிகழ்வில் நேற்று (26.08) கலந்து கொண்ட உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.
இதன்போது மேலும் தெரிவித்த அவர், நமது நாட்டில் மதங்கள் மற்றும் இனங்களுக்கு இடையே பூசல்கள் உருவாக்கப்படுகின்றன என்றும்,வெவ்வேறு புவியியல் அதிகார வரம்புகளில் வாழும் மக்களின் சாதி மற்றும் மதத்தைப் பற்றி பேசி இந்த சர்ச்சைகளை அரசியல்வாதிகளே உருவாக்குகி அதன் மூலம் வாக்குகளைப் பெறவே எதிர்பார்க்கின்றனர் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
வெவ்வேறு பகுதிகளில் உள்ள வெவ்வேறு நபர்களிடம் 13 குறித்து சிலரிடம் விருப்பம் என்றும் மற்றும் சிலரிடம் விருப்பமில்லை என்றும்,ஜனாதிபதி கனவுகளை கொண்ட இவர்கள் இனங்களுக்கும் மதங்களுக்கும் இடையில் முரண்பாடுகளை ஏற்படுத்துகின்றர் எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.
இந்த அரசியல் தலைவர்கள் சரியான குணாதிசயங்களில் இல்லாமல் அதிகாரத்தை பெற்று ஜனாதிபதி மற்றும் பிரதமர் பதவியை பெற முயற்சிக்கின்றனர். தமது சுகபோக வாழ்க்கை பாதிக்கப்படும் என்பதற்காக 220 இலட்சம் மக்களின் வாழ்க்கை எப்படி போனாலும் பரவாயில்லை என்ற போக்கில் பொய்யான வாக்குறுதிகளை வழங்கி ஆட்சியை தக்க வைக்க முயற்சிக்கின்றனர் என காட்டமாக விமர்சித்துள்ளார்.
மதங்கள் இனங்களுக்கிடையில் நல்லிணக்கமும் ஒற்றுமையும் நிலவினால்தான் நாட்டின் ஒருமைப்பாடு,பிரதேச ஒருமைப்பாடு,பலம், இறைமை,எமது தேசியம் எமது வாழ்வியல் பாதுகாக்கப்படும் என வலியுறுத்திய அவர், இன,மத,சாதி முரண்பாடுகள் ஏற்படும் வகையில் ஐக்கிய மக்கள் சக்தி ஒருபோதும் செயற்படாது எனவும் தெரிவித்தார்.
கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது வைத்தியர் சாபிக்கு மலட்டு அறுவை சிகிச்சை செய்ததாக பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து இனப் பிளவைக் கிளப்பினர் னக் கூறிய அவர், இறுதியில்,வைத்தியர் சாபி சரியானவர் என்று நிரூபனமானது என்றும், எனவே சம்புத்த சாசனத்தைப் பாதுகாக்க வேண்டுமானால் அனைத்து இன,மத,இன மக்களுக்கும் இடையிலான பிணைப்பு பலப்படுத்தப்பட வேண்டுமெனவும் வலியுறுத்தினார்.
ஜனாதிபதி,பிரதமர் மற்றும் அமைச்சுப் பதவிகளில் கொண்ட பேராசையால் சிலர் நாட்டை துண்டு துண்டாக பிரித்து வருகின்றனர் என்றும்,இது தேசப்பற்று அல்ல என்றும்,கடந்த காலங்களில் இனவாதத்தையும்,மதவாதத்தையும் தூண்டி அதிகாரத்தைப் பெற்றவரை மக்களே விரட்டியடித்தனர் என்றும் படித்தவர்களையும் அறிவாளிகளையும் இணைத்துக் கொண்டு இந்நாட்டைக் கட்டியெழுப்பப் பங்களிப்பதை தான் பின்பற்றி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
நாட்டு மக்களின் பிரச்சனைகளை பேச பாராளுமன்றத்திற்கு செல்லும் போது பாராளுமன்றத்தில் ஒரு முட்டாள் கூட்டம் கடுமையான வார்த்தைப் பிரயோகங்களை பேசி,பேச்சுக்களில் குறுக்கிட்டு மக்கள் பிரச்சினைகளை மூடிமறைக்க முயற்சிக்கின்றனர் எனவும் அவர் தெரிவித்தார்.
அத்துடன் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பொருளாதாரத் துறைப் பேராசிரியரான வசந்த அத்துகோரலவின் ஆய்வின் பிரகாரம்,இந்நாட்டின் 15 மாவட்டங்களில் உள்ள மக்கள் தண்ணீர் பற்றாக்குறையால் பாரிய பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளனர் என்றும்,இதனால் அம்மக்கள் 10000 கோடி ரூபாவுக்கு மேல் தங்க ஆபரணங்களை அடகு வைத்துள்ளனர் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் பயிர் சேதத்தால் 60000 ஏக்கர் நாசமாகியுள்ளதாகவும், இதனால் 68729 கோடி தங்கம்,நகைகள் ஆபரணங்கள் அடமானம் வைக்கப்பட்டுள்ளன என்றும்,இப்பிரச்சினைகளுக்கு அரசாங்கத்திடம் தீர்வு இல்லை என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
இவ்வாறான பிரச்சினைகளுக்கு மத்தியில் ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் தேர்தலை ஒத்திவைத்து அரசியல் சூதாட்டத்தில் ஈடுபட்டு தம்மைப் பாதுகாத்துக் கொள்வதற்கான திட்டங்களை வகுத்து வருவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் இங்கு மேலும் தெரிவித்தார்.