“API Asia தொழில்நுட்ப மாநாடு – 2023″ நவம்பர் மாதம் கொழும்பில்…

டிஜிட்டல் பொருளாதாரத்தின் முக்கியமான மூன்று தூண்களாக கருதப்படும் செயற்கை நுண்ணறிவு (AI), ஸ்மார்ட் நகரம் மற்றும் நிதி தொழில்நுட்பம் (FinTech) தொடர்பான API Asia தொழில்நுட்ப மாநாடு – 2023″ நவம்பர் 16 ஆம் திகதி கொழும்பு சங்ரீலா ஹோட்டலில் நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் தெரிவித்துள்ளாததாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

‘டிஜிட்டல் பொருளாதாரத்திற்கு வலுவூட்டல்’ என்ற தொனிப்பொருளின் கீழ் 500க்கும் அதிகமானவர்களின் பங்கேற்புடன் நடத்தப்படவுள்ள இந்த மாநாடு இலங்கை தகவல் தொழில்நுட்ப தொழிற்துறை சம்மேளனத்தினால் (FITIS) இந்நாட்டில் இரண்டாவது முறையாக ஏற்பாட்டு செய்யப்படுவதாகவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.

அதேபோல் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் “DIGIECON Sri Lanka 2023 – 2030” நிகழ்ச்சித் திட்டத்திற்கு இணையாக மேற்படி மாநாடும் நடத்தப்படவுள்ளமை சிறப்பம்சமாகும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

“API Asia தொழில்நுட்ப மாநாடு – 2023″ தொடர்பில் தெளிவுபடுத்தும் முகமாக இன்று (06) ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இராஜாங்க அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

“API Asia Conference 2023” இணையத்தளத்தை அங்குரார்ப்பணம் செய்யும் நிகழ்வும் இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் தலைமையில் நடைபெற்றது.

இலங்கையை டிஜிட்டல் பொருளாதாரத்தை நோக்கி இட்டுச்செல்லும் வேலைத்திட்டங்களுக்கு இந்த மாநாட்டின் பங்களிப்பு எவ்வாறானதாக அமையும் என்பது தொடர்பில் விளக்கமளித்த இராஜாங்க அமைச்சர், டிஜிட்டல் முறைமை மாற்றத்தின் கீழ் போட்டித்தன்மை நிறைந்த சந்தைக்குள் பிரவேசிப்பதற்கான வாய்ப்புக்களை அதிகரித்துக்கொள்வதோடு அரச மற்றும் தனியார் துறையினரின் தகவல் தொழில்நுட்ப தெரிவுகளை மேலும் பலப்படுத்த எதிர்பார்த்துள்ளதாகவும் தெரிவித்தார்.

இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் மேலும் கருத்து தெரிவித்த இலங்கை தகவல் தொழில்நுட்ப தொழிற்துறை சம்மேளனத்தின் (FITIS) தலைவர் இந்திக்க டி சொய்சா, தொழில்நுட்ப ஒருங்கிணைப்பு, நிதி முகாமைத்துவம் மற்றும் நிலையான அபிவிருத்தி ஆகியவற்றின் முக்கியத்துவத்தையும், நிதி முகாமைத்துவம் மற்றும் வளர்ச்சியை வலுவான முறையில் முகாமைத்துவம் செய்யும் போது நிறுவன நிர்வாகிகள் எதிர்கொள்ளும் சவால்கள் தொடர்பில் எடுத்துரைத்தார்.

பொருளாதார முன்னேற்றத்திற்கான உந்து சக்தியாக காணப்படும் புதிய முறைமைகள் மற்றும் API முறைமை பற்றிய விளக்கங்களை வழங்குவதாக மேற்படி மாநாடு அமைந்திருக்கும் எனவும் அமைச்சர் நம்பிக்கை தெரிவித்தார்.

API Asia Conference 2023 இன் இணைத் தலைவர் சஞ்சய தயானந்த கருத்து தெரிவிக்கையில், டிஜிட்டல் மாற்றத்திற்கு API அவசியம் என்றும் சமூக மற்றும் நிறுவன சேவைகள் ஊடாக API இன் பரந்தளவான தாக்கம் தொடர்பில் விளக்கமளித்தார்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version